
நமது நிருபர்
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் ஆகஸ்ட் மாதத்துக்குரிய 45.95 டிஎம்சி நீரை கர்நாடகம் திறந்துவிடுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய (சி.டபிள்யு.எம்.ஏ.) கூட்டத்தில் தமிழகம் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
கடந்த ஜூன் 26-ஆம் தேதி நடைபெற்ற சி.டபிள்யு.எம்.ஏ. 41- ஆவது கூட்டத்தின்போது, உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி தமிழகத்துக்குரிய ஜூலை மாதத்துக்கான நீர் அளவை (31.24 டிஎம்சி) கர்நாடகம் உறுதிப்படுத்த வேண்டும் என்று தமிழகத்தின் தரப்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, கர்நாடக நீர்ப்பிடிப்புப் பகுதியில் பருவமழை தொடர்ந்து பெய்துவந்ததால் காவிரியில் நீர் திறந்துவிடப்பட்டிருந்தது.
இதனிடையே, வழக்கமாக நடைபெறும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் 119-ஆவது கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 42-ஆவது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் தில்லியில் உள்ள அதன் அலுவலகத்தில் புதன்கிழமை நேரடியாகவும், காணொலி மூலமாகவும் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக நீர்வளத் துறைச் செயலரும், குழுவின் உறுப்பினருமான ஜெ.ஜெயகாந்தன் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி மூலம் கலந்துகொண்டார்.
அவர் கூட்டத்தின்போது கூறியதாவது: ஜூலை 30-ஆம் தேதி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் இருப்பு அதன் முழுக் கொள்ளளவான 93.470 டிஎம்சி ஆக உள்ளது. கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து அதிகமான உபரிநீர் வெளியேற்றப்படுவதால் மேட்டூர் அணைக்கு இன்று (புதன்கிழமை) காலை நீர்வரத்து விநாடிக்கு 1,12,555 கனஅடியாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது.
ஆகவே, நிலைமைக்கு ஏற்ப மேட்டூர் அணையில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடக அணைகளின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்து கணிசமான அளவு தொடர்ந்துவருவதாலும், தமிழகத்துக்கு நிகழாண்டு ஆகஸ்ட் மாதம் வழங்கப்பட வேண்டிய நீர் அளவான 45.95 டிஎம்சி நீரை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பிலிகுண்டுலுவில் கர்நாடகம் திறந்துவிடுவதை உறுதி செய்ய வேண்டும் என்று ஆணையத்தைக் கேட்டுக்கொண்டார். இதை ஆணையம் கவனத்தில் எடுத்துக்கொண்டது.
இக்கூட்டத்தில் காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் ஆர். சுப்பிரமணியமும் காணொலி மூலம் கலந்துகொண்டார். கேரளம், கர்நாடகம், புதுச்சேரி ஆகிய பிற மாநிலங்களில் இருந்தும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.