
அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டுவது தொடர்பான ஊழல் வழக்கில் விசாரணைக்காக தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஊழல் தடுப்புப் பிரிவு(ஏசிபி) முன்பு ஆஜரானார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டப்பட்டதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மணீஷ் சிசோடியா, சந்யேந்தர் ஜெயின் ஆகியோருக்கு தில்லி அரசின் ஊழல் தடுப்புப் பிரிவின் முன்பு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்தது. சந்யேந்தர் ஜெயின் ஜூன் 6ல் ஊழல் தடுப்புப் பிரிவின் முன்பு விசாரணைக்கு ஆஜரான நிலையில், மணீஷ் சிசோடியா இன்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்
என்ன வழக்கு?
தில்லி அரசுப் பள்ளிகளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகுப்பறைகள் கட்டமைப்பதில் ரூ. 2 ஆயிரம் கோடி அளவுக்கு நிதி முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஏப்ரல் 30ஆம் தேதி ஊழல் தடுப்புப் பிரிவால் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
தேசிய தலைநகரில் முந்தைய ஆம் ஆத்மி அரசு நிதி மற்றும் கல்வித் துறைகளை வகித்த சிசோடியா, பொதுப்பணித் துறை மற்றும் பிற அமைச்சகங்களுக்குப் பொறுப்பாக இருந்த சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தால் குற்றம் சாட்டப்பட்டது தொடர்பாக விசாரிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த அறிக்கை கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என இணை காவல்துறை ஆணையர் மதுர் வர்மா கூறினார். ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 17 இன் கீழ் தகுதி வாய்ந்த அதிகாரியிடமிருந்து தேவையான அனுமதியைப் பெற்ற பிறகு இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஊழல் தொடா்பான புகாா்கள் பாஜக தலைவா்கள் ஹரிஷ் குரானா, கபில் மிஸ்ரா மற்றும் நீலகந்த் பக்ஷி ஆகியோரிடமிருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.