
வேலியே பயிரை மேய்ந்த கதையைப் போல, வாக்குமூலம் அளிக்கச் சென்ற பெண்ணை, காவலர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக ஆளுங்கட்சியாக உள்ள ராஜஸ்தானில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
ராஜஸ்தானிள்ள சங்கானெர் பகுதியில் வசித்து வரும் ஒரு தம்பதியினருக்கு தங்கள் அண்டை வீட்டாருடன் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதையடுத்து அவர்கள் தமது பக்கத்து வீட்டுக்காரர் மீது சங்கானெர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதனிடையே, புகாரளிக்க வந்த கணவன்-மனைவியை தவறான கண்ணோட்டத்தில் பார்த்துள்ளார் சங்கானெர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் பாகாராம்.
இந்த நிலையில், அந்த பெண்ணிடம் வாக்குமூலம் பெற வேண்டும் என்று கூறியுள்ள காவலர் பாகாராம், அவரை மட்டும் சனிக்கிழமை(மார்ச் 8) அன்று தனியாக அப்பகுதியிலுள்ள ஒரு ஹோட்டலுக்கு வரச் சொல்லியிருக்கிறார்.
அங்கு தனது 3 வயது குழந்தையுடன் சென்ற பெண்ணை தனி அறைக்கு அழைத்துச் சென்ற காவலர், அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். மேலும், இந்த விஷயத்தை வெளியே சொன்னால் அவரது கணவர் மீது போலி வழக்குப்பதிந்து சிறையிலடைப்பேன் என்றும் கடுமையாக மிரட்டியிருக்கிறார்.
எனினும், வீட்டுக்குச் சென்றதும் நடந்தவற்றையெல்லாம் தனது கணவரிடம் கூறி அழுது புலம்பியுள்ளார் அந்த பெண்மணி. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த கணவர், காவல் ஆணையர் அலுவலகத்தில் சென்று காவலர் பாகாராம் மீது புகாரளித்துள்ளார்.
இதன் பேரில், தலைமை காவலர் மீது வழக்குப்பதிந்துள்ள காவல் துறை அதிகாரிகள், அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
’பெண்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசு உயா் முன்னுரிமை அளிக்கிறது; பாலியல் வன்கொடுமை போன்ற கொடூர குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன’ என்று பிரதமா் நரேந்திர மோடி மகளிர் நாளான சனிக்கிழமை(மார்ச் 8) பேசியுள்ளார். இந்த நிலையில், பாஜக ஆளுங்கட்சியாக உள்ள ராஜஸ்தானில் சர்வதேச மகளிர் நாளன்று இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது பெண்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.