

அசாம் முன்னாள் அமைச்சரின் மகள் வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல் தெரியவந்துள்ளது.
அசாம் மாநில முன்னாள் உள்துறை அமைச்சரும் மறைந்தவருமான பிரிகு குமார் புகானின் ஒரே மகள் உபசா புகான் (28). இவர் குவஹாத்தியின் கர்குலி பகுதியில் தனது தாயுடன் வசித்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை அவர் தனது வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்ததாகக் கூறப்படுகிறது.
உடனடியாக அவர் குவஹாத்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், நீண்ட காலமாக மனநலப் பிரச்னைகளுடன் போராடி வந்த அவர் அதற்காக சிகிச்சையும் மேற்கொண்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து அந்த அதிகாரி மேலும் கூறுகையில், ஏற்கெனவே அவர் தற்கொலைக்கு முயன்றார்.
நேற்று, அவரது தாயார் வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது, வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்ததாகக் கூறப்படுகிறது. வீட்டில் தற்கொலைக் குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை என்றார். இச்சம்பவம் அசாமில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.