/

நாடு கடத்தப்பட வேண்டிய பாகிஸ்தானியர் திடீர் மரணம்!

நாடு கடத்தப்பட தயாரான நபர் ஒருவர் மரணமடைந்துள்ளதைப் பற்றி...

News image
கோப்புப் படம்
Updated On :1 மே 2025, 6:03 am

DIN

பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட வேண்டிய நபர் ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார்.

பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தானின் ஈடுபாடுள்ளது எனக் கருதப்படுகிறது. இதனால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் போர்ப் பதற்றம் நிலவி வருகின்றது.

இத்துடன், அட்டாரி - வாகா எல்லை மூடப்பட்டதுடன், இரு நாடுகளும் தங்களது குடிமக்களை உடனடியாக தாயகம் திரும்ப அறிவுறுத்தியுள்ளனர். மேலும், இந்தியாவிலுள்ள பாகிஸ்தானியர்கள் அடையாளம் காணப்பட்டு உடனடியாக நாடு கடத்தப்பட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் காலாவதியான விசாவுடன் சட்டவிரோதமாக வசித்த அப்துல் வாஹித் (வயது 69) என்ற நபரை பாகிஸ்தானுக்கு நாடு கடத்த காவல் அதிகாரிகள் பஞ்சாப் மாநிலத்துக்கு அழைத்து வந்திருந்தனர்.

அட்டாரி - வாகா எல்லை வழியாக அவரது தாயகத்துக்கு அனுப்பபட தயாரான சூழலில் அவர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, மத்திய அரசின் உத்தரவினால் 224 இந்தியர்கள் மற்றும் 139 பாகிஸ்தானியர்கள் அட்டாரி - வாகா எல்லை வழியாக தங்களது தாயகங்களுக்கு திரும்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.