
ஆந்திரத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு பிரதமர் மோடி இருமல் மிட்டாய் கொடுத்தார்.
ஆந்திர பிரதேசத்தில் புதிய தலைநகராக அமராவதியை உருவாக்குவது உள்ளிட்ட ரூ.58,000 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
அமராவதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைநகரில் அமைய உள்ள உள்கட்டமைப்புகள், தேசிய நெடுஞ்சாலைகள், ரயில்வே திட்டங்கள், பாதுகாப்புத் துறை சார்ந்த உள்கட்டமைப்புகள் உள்பட 94 திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகக் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது துணை முதல்வர் பவண் கல்யாணுக்கு திடீரென இருமல் ஏற்பட்டது.
இதனால் அவரது உரையில் சிறிது இடையூறு ஏற்பட்டது. இதைக் கவனித்த பிரதமர் மோடி, உடனடியாக தனது வசம் இருந்த இருமல் மிட்டாய் ஒன்றை பவன் கல்யாணிடம் வழங்கினார்.
அப்போது, இதைச் சாப்பிட்டு தண்ணீர் குடிக்கவும் என்று பவண் கல்யாணுக்கு பிரதமர் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. பிரதமரின் இந்த செயல் அங்கிருந்தவர்கள் மத்தியில் கவனம் பெற்றது. தற்போது இதுதொடர்பான விடியோ இணையதளங்களில் வைராகி வருகிறது.