
பாகிஸ்தான் தரப்பிலிருந்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில், அரபிக் கடல் பகுதி இந்திய கடற்படைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீர், ராஜஸ்தான் எல்லையோரப் பகுதிகளில் பாகிஸ்தானிலிருந்து நடத்தப்பட்ட ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன. இந்த தாக்குதல் எதிரொலியாக, கடல் பரப்பின் பாதுகாப்பு, இந்திய கடற்படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை பகலிலும் ஜம்முவில் மிகப் பயங்கர வெடி சப்தம் கேட்டுள்ளது. ஆர்எஸ் புரா, அர்னியா, சம்பா, ஹிராநகர் பகுதிகளின் பல இடங்களைக் குறி வைத்து பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியிருக்கிறது.
இந்தியாவின் விமானப் பாதுகாப்பு தளவாடங்களைக் கொண்டு அனைத்து தாக்குதல்களும் முறியடிக்கப்பட்டுள்ளன. இதுவரை எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதான்கோட் அருகே ஷெல் தாக்குதலையும், ஜெய்சால்மர் அருகே ட்ரோன் தாக்குதல்களையும் நடத்தியது. அவையும் முறியடிக்கப்பட்டன.
இந்நிலையில், நாட்டின் துறைமுகங்கள், கடற்பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நிகழ்த்தினால் பதிலடி கொடுக்க தயார்நிலையில் இந்திய கடற்படை, அரபிக் கடல் பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.
அரபிக்கடலில் இந்திய கடற்படையின் போர் விமானங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், பாகிஸ்தானின் ஒவ்வொரு அசைவும் துல்லியமாகக் கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.