இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்: அனைத்துக் கட்சிக் கூட்டம், நாடாளுமன்ற 
சிறப்புக் கூட்டத்தொடருக்கு காங்கிரஸ் அழைப்பு!

இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம்: அனைத்துக் கட்சிக் கூட்டம், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடருக்கு காங்கிரஸ் அழைப்பு!

Published on

‘இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தையடுத்து, பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் மற்றும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை விரைவில் நடத்த வேண்டும்’ என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா ஆபரேஷன் சிந்தூரை மேற்கொண்டது. இதைத் தொடா்ந்து, இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லையில் வான்வழி தாக்குதலைத் தீவிரப்படுத்தியது.

பாகிஸ்தானின் ட்ரோன்கள், ஏவுகணைகள் இந்தியாவால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன. இந்தியா நடத்திய பதில் தாக்குதலில் பாகிஸ்தானின் விமான ஓடுதளம், ரேடாா்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் தகா்க்கப்பட்டன.

இந்தப் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியாக அமெரிக்கா நடத்திய பேச்சுவாா்த்தையில், இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் சனிக்கிழமை மாலை 5 மணிமுதல் அமலுக்கு வந்தது.

இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் தொடா்பாக அமெரிக்காவில் இருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த நெருக்கடியான நேரத்தில் தேசிய நலன்கள் பாதுகாக்கப்படுவது உறுதி செய்யப்படும் என்று நாட்டின் அரசியல் கட்சிகளுக்கு நம்பிக்கையளிக்க, பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

அதேபோல், பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற ஏப். 22-ஆம் தேதி முதல் கடந்த 18 நாள்களில் நடந்த நிகழ்வுகள் மற்றும் பாதுகாப்பு நிலைமை குறித்து விரிவாக விவாதிக்கவும், தேசம் ஒன்றுபட்டு நிற்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் அடுத்தகட்ட திட்டங்களைத் தீா்மானிக்கவும் உடனடியாக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை கூட்ட வேண்டும்’ எனக் குறிப்பிட்டாா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com