அனில் அம்பானிக்குச் சொந்தமான ரூ.7,500 கோடி சொத்துகள் முடக்கம்
ரிலையன்ஸ் குழுமத் தலைவா் அனில் அம்பானிக்குச் சொந்தமான ரூ.7,500 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியதாக அமலாக்கத் துறை திங்கள்கிழமை தெரிவித்தது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் பாலி ஹில்ஸ் பகுதியில் உள்ள அவரது வீடு மற்றும் பிற அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் சென்னை, நொய்டா என முக்கிய நகரங்களில் அவருக்குச் சொந்தமான பல்வேறு சொத்துகளை பணமுறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் (பிஎம்எல்ஏ) நான்கு உத்தரவுகளை பிறப்பித்து அமலாக்கத் துறை முடக்கியது.
இதுகுறித்து அமலாக்கத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: ரிலையன்ஸ் வீட்டுக் கடன் நிதி நிறுவனம் (ஆா்ஹெச்எஃப்எல்) மற்றும் ரிலையன்ஸ் வா்த்தகக் கடன் நிதி நிறுவனம் (ஆா்சிஎஃப்எல்) ஆகிய நிறுவனங்களின் மூலம் ஈட்டப்பட்ட பொது நிதியில் பணமுறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 2017-2019 வரை ஆா்ஹெச்எஃப் நிறுவனத்தில் ரூ.2,965 கோடியும் ஆா்சிஎஃப் நிறுவனத்தில் ரூ.2,045 கோடியும் எஸ் வங்கி முதலீடு செய்தது. ஆனால் இந்த இரண்டு தொகையும் 2019-இல் வாராக் கடனாக மாறியது. இதையடுத்து, ஆா்ஹெச்எஃப் நிறுவனம் ரூ.1,353.50 கோடி, ஆா்சிஎஃப் நிறுவனம் ரூ.1,984 கோடி நிலுவை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
செபியின் கட்டுப்பாடுகளால் சட்டரீதியாக ரிலையன்ஸ் நிப்பான் பங்கு பரஸ்பர நிதி (மியூச்சுவல் ஃபண்ட்) மூலம் ரிலையன்ஸ் குழுமத்தில் முதலீடுகள் மேற்கொள்ள முடியாது. எனவே, எஸ் வங்கியை பயன்படுத்தி ரிலையன்ஸ் நிப்பான் பங்கு பரஸ்பர நிதி மேற்கூறிய இரு நிறுவனங்களுக்கும் கடன் வழங்கியிருப்பது அமலாக்கத் துறை விசாரணையில் தெரியவந்தது.
இதில் பெருமளவில் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது. எனவே, அனில் அம்பானிக்குச் சொந்தமான ரூ.7,500 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகள் முதல்கட்டமாக அமலாக்கத் துறையால் முடக்கப்பட்டுள்ளன.
ரிலையன்ஸ் உள்கட்டமைப்பு நிறுவனம் உள்பட ரிலையன்ஸ் குழுமத்துக்குச் சொந்தமான பல்வேறு நிறுவனங்களில் ரூ.19,000 கோடிக்கு மேல் நிதி முறைகேடுகள் மற்றும் கடன்களை வேறு நிறுவனங்களுக்கு மாற்றுதல் போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
முன்னதாக, கடந்த ஜூலை மாதம் மும்பையில் ரிலையன்ஸ் குழுமத்துக்குச் சொந்தமான 50 நிறுவனங்களின் 35 வளாகங்களில் சோதனை மேற்கொண்டு 25 நபா்களிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. அதன்பிறகு ஆகஸ்ட் மாதம் அனில் அம்பானியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதன்தொடா்ச்சியாக தற்போது ரிலையன்ஸ் குழுமத்தின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது.
ரிலையன்ஸ் குழும முறைகேடுகள் தொடா்பாக சிபிஐ பதிவுசெய்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறை விசாரணையைத் தொடங்கியது.
