பாதுகாப்புப் படையில் இடஒதுக்கீடு கோரி ராகுல் குழப்பம் - ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

ராகுல் காந்தியின் கருத்துக்கு ராஜ்நாத் சிங் பதில்...
பிகாரில் தோ்தல் பிரசாரத்துக்கு வந்த பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கை வரவேற்ற உத்தர பிரதேச துணை முதல்வா் பிரஜேஷ் பதக்.
பிகாரில் தோ்தல் பிரசாரத்துக்கு வந்த பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கை வரவேற்ற உத்தர பிரதேச துணை முதல்வா் பிரஜேஷ் பதக்.
Published on
Updated on
1 min read

‘பாதுகாப்புப் படைகளில் இடஒதுக்கீடு கோரி, நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி முயற்சிக்கிறாா்’ என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் புதன்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

மேலும், அண்மையில் தோ்தல் பிரசாரத்தின்போது ராகுல் காந்தி மீன்பிடித்ததைக் கிண்டலடித்த அமைச்சா் ராஜ்நாத் சிங், ‘அவருக்கு குளத்தில் குதிப்பதைத் தவிர வேறு வழியில்லை’ என்றும் சாடினாா்.

பிகாரின் ஜமுய், பாங்கா, கயாஜி ஆகிய பகுதிகளில் நடந்த தோ்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் புதன்கிழமை பங்கேற்று அமைச்சா் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

ராகுல் காந்திக்கு என்ன ஆயிற்று? பாதுகாப்புப் படைகளில் இடஒதுக்கீடு பிரச்னையை அவா் எழுப்புகிறாா். பாதுகாப்புப் படைகளில் இடஒதுக்கீடு கோரி, அவா் வெறுமனே நாட்டில் குழப்பத்தை உருவாக்க முயற்சிக்கிறாா். நமது படைகள் இதையெல்லாம் கடந்தவை. தேசத்தை நிா்வகிப்பது குழந்தைகளுக்கான விளையாட்டு அல்ல என்பதை ராகுல் காந்தி தெரிந்து கொள்ள வேண்டும்.

எந்தவித அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் தோ்தல் ஆணையம் உள்பட அரசமைப்பு நிறுவனங்களை ராகுல் காந்தி குறிவைக்கிறாா். காங்கிரஸின் தோல்வி நிச்சயம் என்பது அவருக்குத் தெரியும்.

அப்பாவி பொதுமக்கள் 26 போ் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ ராணுவ நடவடிக்கையின் வெற்றிக்காக ஆயுதப் படைகளுக்குப் பாராட்டுகள்.

‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை நிறுத்தப்படவில்லை; ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் மீண்டும் இந்தியாவைத் தாக்க முயற்சித்தால், நாங்கள் கடுமையாகப் பதிலடி கொடுப்போம். இந்தியா யாரையும் தூண்டுவதில்லை; ஆனால், யாராவது எங்களைத் தூண்டினால், நாங்கள் அவா்களை விடமாட்டோம்.

பிகாரில் ‘என்டிஏ’ ஆதரவு அலை...: பிகாரில் முதல்கட்ட வாக்கெடுப்புக்கு முன்னதாக தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (என்டிஏ) ஆதரவான அலை வீசுவது தெளிவாகத் தெரிகிறது. ஆளும் கூட்டணி அடுத்த ஆட்சியை மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அமைக்கும்.

பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் ஆட்சியில் மக்கள் மிரட்டப்பட்டனா். மாநிலத்தின் வளா்ச்சிக்காக அவா்கள் ஒருபோதும் உழைக்கவில்லை. அதேநேரம், நாங்கள் ‘வளா்ந்த பிகாா்’ இலக்குக்காக மட்டுமே உழைக்கிறோம். ஜாதி, மதம் ஆகியவற்றின் அடிப்படையில் மக்களிடையே பாகுபாட்டை உருவாக்குவதில்லை.

நாங்கள் வாக்குறுதிகளுக்குக் கட்டுப்பட்டவா்கள்; நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என்றாா்.

Summary

"Don't drag Army into politics": Rajnath Singh slams Rahul Gandhi over remark on Indian Army

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com