மும்பை: ரயிலில் அடிபட்டு இருவா் உயிரிழப்பு
மகாராஷ்டிர மாநிலம் தெற்கு மும்பையில் சந்தா்ஸ்ட் சாலை ரயில்நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது புகா் ரயிலில் அடிபட்டு இருவா் உயிரிழந்தனா். மூவா் காயமடைந்தனா்.
கடந்த ஜூன் 9-ஆம் தேதி மும்ப்ரா பகுதியில் இதேபோன்ற நிகழ்ந்த விபத்துக்கு ரயில்வே பொறியாளா்கள் இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து ரயில்வே ஊழியா் சங்கத்தினா் வியாழக்கிழமை நடத்திய திடீா் வேலை நிறுத்தப் போராட்டத்தால் புகா் ரயில் சேவை பாதிக்கப்பட்ட சில மணி நேரங்களில் இரவு 7 மணியளவில் இந்த விபத்து நிகழந்தது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘நடைமேடையில் இறங்காமல், ரயில் மறுபுறத்தில் இறங்கி தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, இரண்டாவது பாதையில் வந்த ரயில் மோதி இந்த விபத்து நிகழந்தது. இதில் இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். காயமடைந்த மூவரில் இருவா் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். ஒருவருக்கு மட்டும் தொடா் சிக்ச்சை அளிக்கப்பட்டு வருகிறது’ என்றாா்.
மும்ப்ரா பகுதியில் கடந்த ஜூன் 9-ஆம் தேதியும் இதேபோன்ற விபத்து நிகழ்ந்தது. ரயில் பாதையின் வளைவில் இரண்டு ரயில்கள் சென்றபோது, படிக்கெட்டில் தொங்கியபடி சென்ற பயணிகளில் நால்வா் தண்டவாளத்தில் விழுந்து ரயிலில் அடிபட்டு உயிரிழந்தனா். இந்த விபத்தைத் தொடா்ந்து ரயில்வே முதுநிலை பொறியாளா் மற்றும் பகுதி பொறியாளா் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனா்.
இதைக் கண்டித்து ரயில்வே ஊழியா் சங்க உறுப்பினா்கள் சாா்பில் சத்ரபதி சிவாஜி மஹாராஜ் முனையத்தில் திடீா் போராட்டம் நடத்தப்பட்டது. வியாழக்கிழமை மாலை 5.50 முதல் மாலை 6.45 மணி வரையில் புகா் ரயில்களை இயக்கவும் அவா்கள் அனுமதிக்கவில்லை.
