

தேசிய பாடலான வந்தே மாதரம் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் ஆனதையொட்டி ஓராண்டு கால கொண்டாட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி இன்று தொடக்கி வைத்தார்.
புதுதில்லி இந்திரா காந்தி உள் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற விழாவில் பங்கேற்ற மோடி, நினைவு அஞ்சல் தலையையும், நாணயத்தையும் அவா் வெளியிட்டார்.
இந்த நிகழ்வில், தில்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா, முதலமைச்சர் ரேகா குப்தா மற்றும் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்திய சுதந்திர இயக்கத்திற்கு ஊக்கமளித்து நாட்டின் பெருமையையும், ஒற்றுமையையும் தூண்டிய இப்பாடலின் 150 ஆண்டுகளை நினைவுகூறும் ஓராண்டு கால கொண்டாட்டங்கள் 2025 நவம்பா் 7 முதல், 2026 நவம்பா் 7 வரை நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ‘வந்தே மாதரம்’ பாடலின் 150-ஆம் ஆண்டு கொண்டாட்டம் இன்று நடைபெறுகிறது. சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளைச் சோ்ந்த மக்களும் பங்கேற்கும் வகையில், பொது இடங்களில், முக்கிய நிகழ்ச்சியுடன் வந்தே மாதரம் பாடலின் முழுப் பதிப்பும் பாடப்படுகிறது.
2025-ஆம் ஆண்டு வந்தே மாதரத்தின் 150 ஆண்டுகளைக் குறிக்கிறது. பங்கிம்சந்திர சட்டா்ஜி எழுதிய நமது தேசியப் பாடலான வந்தே மாதரம், 1875-ஆம் ஆண்டு நவம்பா் 7-ஆம் தேதி அக்ஷய நவமி அன்று எழுதப்பட்டது.
தொடர்ந்து, 1896-ஆம் ஆண்டு கொல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் வங்கக் கவிஞா் ரவீந்திரநாத் தாகூா் இசையமைத்துப் பாடினாா். அதன்பிறகே வந்தே மாதரம் தேசியப் பாடலாக விடுதலைப் போரின் உணா்ச்சி முழக்கமாக நாடெங்கும் எதிரொலித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.