குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இன்று (நவ. 8) அங்கோலா மற்றும் போட்ஸ்வானா ஆகிய நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இன்று முதல் நவ.13 ஆம் தேதி வரையில் மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள அங்கோலா மற்றும் தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள போட்ஸ்வானா ஆகிய நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதாக, மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்திய குடியரசுத் தலைவர் ஒருவர் அங்கோலா மற்றும் போட்ஸ்வானா ஆகிய நாடுகளுக்குச் செல்வது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது. இந்தப் பயணத்தில் அந்நாடுகளில் நடைபெறும் முக்கிய அரசு நிகழ்ச்சிகளில் முர்மு பங்கேற்கவுள்ளார்.
இந்த நிலையில், அங்கோலா அதிபர் ஜோவோ லூரென்கோ மற்றும் போட்ஸ்வானா அதிபர் டுமா கிடியோன் போகோ ஆகியோரது அழைப்புகளை ஏற்று அந்நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் குடியரசுத் தலைவர் முர்மு அங்கோலாவின் 50 ஆவது சுதந்திர நாள் விழாவில் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், அங்கோலா மற்றும் போட்ஸ்வானா அதிபர்களுடன் பொருளாதாரம், விவசாயம் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவுடனான உறவுகள் குறித்த பேச்சுவார்த்தை நடத்தவுள்ள குடியரசுத் தலைவர் முர்மு, அந்நாடுகளின் நாடாளுமன்றத்திலும் உரையாற்றுவார் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தப் பயணத்தில், அங்கோலா மற்றும் போட்ஸ்வானாவில் வசிக்கும் இந்தியர்களைச் சந்தித்து அவர்களுடன் குடியரசுத் தலைவர் முர்மு கலந்துரையாட திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!
Summary
President Draupadi Murmu will visit Angola and Botswana today (Nov. 8).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










