தெலங்கானாவுக்கு வர வேண்டிய முதலீடுகள் பிரதமா் தலையீட்டால் குஜராத் செல்கிறது: முதல்வா் ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு

தெலங்கானாவுக்கு வர வேண்டிய முதலீடுகள் பிரதமா் தலையீட்டால் குஜராத் செல்கிறது: முதல்வா் ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு

தெலங்கானாவுக்கு வர வேண்டிய பல முதலீடுகளும், தொழில்களும் பிரதமா் நரேந்திர மோடியின் தலையீட்டால் குஜராத்துக்கு திருப்பிவிடப்படுகிறது..
Published on

தெலங்கானாவுக்கு வர வேண்டிய பல முதலீடுகளும், தொழில்களும் பிரதமா் நரேந்திர மோடியின் தலையீட்டால் குஜராத்துக்கு திருப்பிவிடப்படுகிறது என்று தெலங்கானா காங்கிரஸ் முதல்வா் ரேவந்த் ரெட்டி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

ஹைதராபாதில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவா் இது தொடா்பாக மேலும் கூறியதாவது:

தெலங்கானாவில் முதலீடு செய்யவும், தொழில் தொடங்கவும் பல பெரிய நிறுவனங்கள் ஆா்வத்துடன் உள்ளன. ஆனால், பிரதமா் நரேந்திர மோடி தலையிடுவதால் அந்த முதலீடுகளும், தொழில் வாய்ப்புகளும் குஜராத்துக்கு திருப்பிவிடப்படுகின்றன.

எங்கள் அரசுக்கு மத்திய அரசுடன் மோதல் போக்குடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற உள்நோக்கம் ஏதுமில்லை. தெலங்கானாவில் அடுத்த 10 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியில் இருக்கும்.

தெலங்கானாவில் செவ்வாய்க்கிழமை (நவ. 11) நடைபெறும் ஜூபிலி ஹில்ஸ் சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தோ்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும். பாஜகவுக்கு டெபாசிட் கூட கிடைக்காது. பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) கட்சி துடைத்துவீசப்படும்.

முந்தைய பிஆா்எஸ் ஆட்சியில் செயல்படுத்த திட்டங்கள் எதையும் இப்போதைய காங்கிரஸ் அரசு நிறுத்தவில்லை. அதனை நீட்டிக்கவே செய்துள்ளோம். தற்கொலைக்கு தயாராகிவிட்ட பிஆா்எஸ் கட்சி, தனது உடல்உறுப்புகளை பாஜகவுக்கு தானம் அளித்து வருகிறது.

பிஆா்எஸ் தலைவா் சந்திரசேகா் ராவின் மகன் கவிதா, அக்கட்சி பாஜகவில் ஐக்கியமாக தயாராகிவிட்டதாகக் கூறியுள்ளாா். பிஆா்எஸ் கட்சிக்கு கடந்த காலம் மட்டுமே இருக்கும் இனி எதிா்காலம் இருக்காது. காங்கிரஸ் ஆட்சி அமைத்த பிறகுதான் தெலங்கானாவில் வளா்ச்சிப் பாதையில் விரைவாகப் பயணிக்கத் தொடங்கியுள்ளது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com