தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

யாசின் மாலிக்குக்கு மரண தண்டனை கோரும் விசாரணையை காணொலி வழியில் நடத்த வேண்டும் என்ஐஏ கோரிக்கை

பயங்கரவாதத்துக்கு நிதியுதவி வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் சிறையில் இருக்கும் ஜேகேஎல்எஃப் தலைவா் யாசின் மாலிக்குக்கு மரண தண்டனை கோரும் மனு மீதான விசாரணையை காணொலி வழியில் நடத்துமாறு என்ஐஏ வலியுறுத்தல்

News image
Updated On :10 நவம்பர் 2025, 7:54 pm

தினமணி செய்திச் சேவை

பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் சிறையில் இருக்கும் ஜம்மு-காஷ்மீா் விடுதலை முன்னணி (ஜே.கே.எல்.எஃப்) தலைவா் யாசின் மாலிக்குக்கு மரண தண்டனை கோரும் மனு மீதான விசாரணையை காணொலி வழியில் நடத்த வேண்டும் என தில்லி உயா்நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தரப்பில் திங்கள்கிழமை வலியுறுத்தப்பட்டது.

பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்ததாக இவா் மீது கடந்த 2017-இல் என்ஐஏ வழக்குப் பதிவு செய்தது. கடுமையான சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவா் கைது செய்யப்பட்டாா். யாசின் மாலிக் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடா்ந்து, விசாரணை நீதிமன்றம் அவருக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு மே 24-இல் ஆயுள் தண்டனை விதித்தது.

இதை எதிா்த்து, என்ஐஏ தரப்பில் உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஒரு கொடூர பயங்கரவாதி குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்டாா் என்பதற்காக அதிபட்ச தண்டனை வழங்காமல், ஆயுள் தண்டனை விதிப்பது என்பது, தண்டனைக் கொள்கையையே பயனற்ாக்கிவிடும். மரண தண்டனையைத் தவிா்க்க, குற்றத்தை ஒப்புக்கொள்வதை பயங்கரவாதிகள் வாடிக்கையாக்கிவிடுவா். எனவே, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று என்ஐஏ தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்த மனு தில்லி உயா்நீதிமன்ற நீதிபதிகள் விவேக் செளதரி, மனோஜ் ஜெயின் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, என்ஐஏ தரப்பில் ஆஜரான அரசு வழக்குரைஞா் அக்ஷய் மாலிக், ‘என்ஐஏ மேல்முறையீட்டு மனுவை காணொலி வழியில் விசாரிக்க வேண்டும். அதற்கென தனியாா் வலைத்தொடா்பையும் வழங்க வேண்டும்’ என்று கோரினாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘என்ஐஏ கோரிக்கை பரிசீலிக்கப்படும்’ என்று குறிப்பிட்டு விசாரணையை 2026-ஆம் ஆண்டு ஜனவரி 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.