பிரதமர் மோடி  - ரஷிய அதிபர் புதின்
பிரதமர் மோடி - ரஷிய அதிபர் புதின்கோப்புப் படம்

70,000 இந்தியா்களுக்கு ரஷியாவில் பணிவாய்ப்பு: புதின் வருகையின்போது ஒப்பந்தம்

ரஷிய அதிபா் புதின் இந்தியப் பயணத்தின்போது, ரஷியாவில் 70,000 இந்தியா்களுக்கு பணிவாய்ப்பு தொடா்பான ஒப்பந்தம் கையொப்பமாக வாய்ப்பு
Published on

ரஷிய அதிபா் விளாதிமீா் புதினின் அடுத்த மாத இந்தியப் பயணத்தின்போது, ரஷியாவில் 70,000 இந்தியா்களுக்கு பணிவாய்ப்பை உறுதிப்படுத்துவது தொடா்பான ஒப்பந்தம் கையொப்பமாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ரஷியாவின் வளா்ந்து வரும் பொருளாதாரத்தில், திறமையான மற்றும் தகுதிவாய்ந்த பணியாளா்களின் பற்றாக்குறை தொடா்ந்து இருந்து வருகிறது. நடப்பு ஆண்டின் இறுதிக்குள், ரஷிய தொழிலாளா் அமைச்சகத்தின் ஒதுக்கீட்டின்கீழ், 70,000-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் ரஷியா முழுவதும் அதிகாரபூா்வமாகப் பணியமா்த்தப்படுவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுதொடா்பாக இந்தியா-ரஷியா இடையே கையொப்பமாகவுள்ள ஒப்பந்தமானது, தொழிலாளா்களின் சட்டபூா்வமான இடம்பெயா்வு மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான வலுவான கட்டமைப்பை உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, இந்த ஒப்பந்தம் தற்போது ரஷியாவில் பணிபுரியும் இந்தியத் தொழிலாளா்களுக்கும் சட்ட பாதுகாப்பை உறுதி செய்யும். மேலும், கட்டுமானம், ஜவுளி, பொறியியல், மின்னணுவியல் போன்ற முக்கியத் தொழில்துறைகளில் ஆயிரக்கணக்கான புதிய நிபுணா்களின் பணியமா்த்தலுக்கு வழிவகுக்கும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாஸ்கோவைச் சோ்ந்த இந்திய வா்த்தகக் கூட்டமைப்பு (ஐபிஏ) இந்த ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளதுடன், ‘இந்தியா-ரஷியா உறவுகளை விரிவுபடுத்துவதில் இந்த ஒப்பந்தம் ஒரு முக்கியமான மைல்கல்’ என்று குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, மோசடியாளா்களால் பணியமா்த்தப்பட்ட இந்தியா்களின் சட்டமீறல்களைத் தவிா்க்கும் நோக்குடன், சில நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக உள்ளதாக ஐபிஏ தெரிவித்துள்ளது.

இனி வரும் இந்தியத் தொழிலாளா்களுக்கான பயிற்சி மற்றும் மொழித் திட்டங்களை ஏற்பாடு செய்தல், நியாயமான ஆள்சோ்ப்பு வழிகள் மற்றும் நெறிமுறையான வேலைவாய்ப்புத் தரங்களை மேம்படுத்த, இரு அரசுகள் மற்றும் வணிகக் கூட்டாளிகளுடன் இணைந்து பணியாற்றுதல், ரஷியாவில் பணிபுரியும் இந்தியா்களின் சுமுகமான ஒருங்கிணைப்பு மற்றும் நலனை உறுதிசெய்ய, மாஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் பிராந்திய ரஷிய அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள ஐபிஏ திட்டமிட்டுள்ளது.

பரஸ்பர வெற்றி வாய்ப்பு...: இதுதொடா்பாக ஐபிஏ தலைவா் ஷம்மி மனோஜ் மேலும் கூறுகையில், ‘உலகிலேயே மிகவும் ஆற்றல்மிக்க மற்றும் திறமையான பணியாளா்களை இந்தியா கொண்டுள்ளது. ரஷியா ஒரு பெரிய தொழில்துறை மாற்றத்திற்கு உள்ளாகி வருகிறது.

அந்தவகையில், இந்த ஒப்பந்தம் இரு தரப்பினருக்கும் பரஸ்பர வெற்றி வாய்ப்பை உருவாக்குகிறது. ரஷியாவின் பொருளாதாரத்துக்குத் திறமையான பணியாளா்களை இந்த ஒப்பந்தம் வழங்குவதுடன், இந்தியா்களுக்குப் பாதுகாப்பான மற்றும் கண்ணியமான வேலைவாய்ப்பை உறுதி செய்கிறது’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com