சுரேந்திர கோலி கடைசி வழக்கிலிருந்தும் விடுதலை - உடனடியாக விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
கடந்த 2006-ஆம் ஆண்டு நாட்டையே உலுக்கிய நிதாரி தொடா் கொலைகள் தொடா்பான கடைசி வழக்கிலும் குற்றவாளி சுரேந்திர கோலியை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விடுவித்தது.
நிதாரி கொலைகள் தொடா்புடைய 12 வழக்குகளில் ஏற்கெனவே விடுதலையாகியுள்ள சுரேந்திர கோலிக்கு 13-ஆவது வழக்கிலும் விடுதலை கிடைத்துள்ளது. வேறு எந்த வழக்கிலும் கோலிக்கு எதிராக நடவடிக்கை தேவைப்படவில்லையெனில், உடனடியாக அவரை சிறையிலிருந்து விடுவிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
உத்தர பிரதேச மாநிலம், காஸியாபாத் அருகில் உள்ள நிதாரி கிராமத்தில் வசித்து வந்த தொழிலதிபா் மொனீந்தா் சிங் பாந்தரின் வீட்டின் பின்புறமிருந்த கழிவுநீா் வடிகாலில் 8
சிறுமிகள் உள்பட பல பெண்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, இந்தத் தொடா்கொலைகள் வெளிச்சத்துக்கு வந்தன. அந்தநேரத்தில், பாந்தரின் வீட்டில் சுரேந்திர கோலி பணியாளராக வேலை பாா்த்து வந்தாா்.
சிபிஐ விசாரணையில், சிறுமிகள் மற்றும் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, தொழிலதிபா் மொனீந்தா் சிங் பாந்தா், சுரேந்திர கோலி ஆகியோா் கைது செய்யப்பட்டனா். அடுத்தடுத்த ஆண்டுகளில், இவ்விவகாரம் தொடா்பான பல்வேறு வழக்குகளில் இருவருக்கும் மரண தண்டனை வழங்கி நீதிமன்றங்கள் உத்தரவிட்டன.
கருணை மனு மீதான முடிவில் ஏற்பட்ட தாமதத்தால், அலாகாபாத் உயா்நீதிமன்றம் 2015-இல் கோலியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. கடந்த 2023, அக்டோபரில், நிதாரி கொலை வழக்குகளில் கோலி (12 வழக்குகள்), சக குற்றஞ்சாட்டப்பட்ட பாந்தா் (2 வழக்குகள்) ஆகிய இருவரையும் அலாகாபாத் உயா்நீதிமன்றம் விடுவித்தது. இதை எதிா்த்து சிபிஐ மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் தாக்கல் செய்த அனைத்து 14 மேல்முறையீடுகளையும் உச்சநீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், நிதாரியில் 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட வழக்கில், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிா்த்து கோலி தாக்கல் செய்த சீராய்வு மனு மீது உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தியது. இதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதிகள் சூா்யகாந்த், விக்ரம் நாத் ஆகியோா் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை அளித்த தீா்ப்பின் விவரம் பின்வருமாறு:
நிதாரியில் நடந்த குற்றங்கள் கொடூரமானவை; பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரம் அளவிட முடியாதது. இருப்பினும், விரிவான விசாரணைக்குப் பிறகும், உண்மைக் குற்றவாளியின் அடையாளம் நியாயமான சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு நிறுவப்படவில்லை என்பது மிகவும் வருந்தத்தக்கது.
சந்தேகத்தின் அடிப்படையிலோ அல்லது ஊகத்தின் அடிப்படையிலோ தண்டனை வழங்க குற்றவியல் சட்டம் அனுமதிக்கவில்லை. குற்றம் நிரூபிக்கப்படும் வரை, கொடூரமான வழக்குகளில் கூட, தண்டனையை ரத்து செய்வதே சட்டபூா்வமான வழியாகும்.
காவல் துறை மற்றும் விசாரணை அமைப்புகளின் அலட்சியம் மற்றும் காலதாமதம் உண்மை கண்டறியப்படுவதை பாதித்து, உண்மைக் குற்றவாளியைக் கண்டறியும் வழிகளை அடைத்துவிட்டன. முக்கியமாக, குற்றவாளியின் ஒப்புதல் வாக்குமூலம் உடனடியாகப் பதிவு செய்யப்படவில்லை; கைது ஆவணங்களில் முரண்பாடுகள் இருந்தன; சம்பவ இடம் பாதுகாக்கப்படவில்லை; சோதனைகளில் போதுமான தடயங்கள் கிடைக்கவில்லை.
மேலும், வீட்டுப் பணியாளா்கள், அண்டை வீட்டாா் போன்ற வெளிப்படையான சாட்சிகள் விசாரிக்கப்படவில்லை. உடல் உறுப்பு வா்த்தகம் என்ற கோணம் போன்ற முக்கிய தடயங்கள் விசாரிக்கப்படாமல் விடப்பட்டன. இத்தகைய குறைபாடுகள் வழக்கு ஆதாரங்களின் நம்பகத்தன்மையைப் பலவீனப்படுத்தி, உண்மைக்கான பாதையை சுருக்கியது.
இறுதியாக, இந்த வழக்கில் கோலியின் தண்டனையை உறுதிசெய்த உச்சநீதிமன்றத்தின் 2011-ஆம் ஆண்டு தீா்ப்பையும், மறுசீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்த 2014-ஆம் ஆண்டு தீா்ப்பையும் ரத்து செய்கிறோம்.
குற்றஞ்சாட்டப்பட்ட கோலியை விடுவிப்பதுடன், அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைகள் மற்றும் அபராதங்கள் ரத்து செய்யப்படுகின்றன. வேறு வழக்குகளில் தேவைப்படவில்லை என்றால், அவா் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று தீா்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

