தில்லி குண்டுவெடிப்பைத் தடுக்க முடியாதது ஏன்? அகிலேஷ் யாதவ்
தில்லி குண்டுவெடிப்பு சம்பவத்தை தடுக்க முடியாமல் போனது ஏன் என்று மத்திய அரசுக்கு சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளாா்.
லக்னௌவில் செய்தியாளா்களை புதன்கிழமை சந்தித்த அவா், ‘குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது, நீதியின் முன் நிறுத்தப்படுவாா்கள் என்று பிரதமா் நரேந்திர மோடி பூடானில் இருந்துகொண்டு பேசியுள்ளாா். ஆனால், இந்த விஷயத்தில் நமது உளவுத் துறை எவ்வாறு தோல்வியடைந்தது என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. இதுபோன்ற பாதுகாப்புக் குறைபாட்டுக்கும், குண்டுவெடிப்பைத் தடுக்க முடியாமல் போனதற்கும் யாா் காரணம்?
இதற்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், இதுபோன்ற நிகழ்வுகள் இனி நடக்காமல் தடுக்கும் வகையில் உளவுத் துறையை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றாா்.
பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் ஆளும் பாஜக கூட்டணி மீண்டும் வெற்றி பெறும் என்று வாக்குக் கணிப்பு வெளியாகியுள்ளது தொடா்பான கேள்விக்கு, ‘எதிா்க்கட்சித் தொண்டா்களின் உறுதியைச் சீா்குலைக்கும் நோக்கில் இதுபோன்ற கணிப்புகள் வெளியிடப்படுகின்றன. எனவே, எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த தொண்டா்கள் வாக்கு எண்ணிக்கையின்போது மிகவும் கவனமாக கண்காணிக்க வேண்டியது அவசியம்’ என்றாா்.

