

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள முதல்வர் நிதீஷ் குமாருக்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், ஐக்கிய ஜனதா தளம் - பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நிதீஷ் குமாருக்கு வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில், மூத்த தலைவர் நிதீஷ் குமார் அவர்களின் மகத்தான வெற்றிக்கு நான் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பிகார் மக்களின் எதிர்பார்ப்புகளை அவர் உரிய முறையில் நிறைவேற்றுவதற்கும் என்னுடைய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் இளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், அவர்களின் அயராத பிரசாரத்திற்கும் நான் பாராட்டுகளை பதிவு செய்கிறேன்.
பிகார் தேர்தல் முடிவுகள், மக்கள் நலனுக்காக பணியாற்றுவது, சமூக மற்றும் சித்தாந்த கூட்டணிகள், தெளிவான அரசியல் தகவல் மற்றும் கடைசி வாக்குப் பதிவு செய்யப்படும் வரையில், அர்ப்பணிப்புடன் மேலாண்மைப் பணிகளை செய்வது என அனைத்தையும் வெளிப்படுத்துவதாக உள்ளது.
எனவே, இந்த விவகாரங்களை, இந்தியா கூட்டணித் தலைவர்கள் நன்கு கற்றுக்கொண்டு வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ளத் தேவையான திறன்களை வளர்த்துக் கொண்டுள்ள சிறந்த அரசியல்வாதிகள்தான் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இந்தத் தேர்தலின் முடிவு தேர்தல் ஆணையத்தின் தவறான, பொறுப்பற்ற செயல்களை மூடிமறைப்பதாக இல்லை. தேர்தல் அணையத்தின் நற்பெயர் மிகக் குறைந்த இடத்தில் உள்ளது. இந்த நாட்டின் குடிமக்கள் ஒரு வலுவான மற்றும் பாரபட்சமற்ற தேர்தல் ஆணையத்திற்கு தகுதியானவர்களே, தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல்கள், வெற்றி பெறாதவர்களிடையே கூட நம்பிக்கையை உருவாக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.