

பஞ்சாபில் ஆர்எஸ்எஸ் தலைவரின் மகன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. பஞ்சாபின் ஃபெரோஸேபூரில் ராஷ்ட்ரீய சேவா சங்க்(ஆர்எஸ்எஸ்) உறுப்பினராகவும் உள்ளூர் ஆர்எஸ்எஸ் தலைவராகவும் இருப்பவர் பல்தேவ் ராஜ் அரோரா. இந்த நிலையில், அவருடைய மகனை அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.
32 வயதான நவீன் அரோரா ஃபெரோஸேபூரில் கடை நடத்தி வரும் நிலையில், சனிக்கிழமை(நவ. 15) தமது கடையிலிருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருக்கும்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் நவீன் அரோராவை சுட்டுவிட்டு தப்பியுள்ளனர். அதில், சம்பவ இடத்திலேயே நவீன் உயிரிழந்தார். உயிரிழந்த நவீனின் தாத்தாவும் ஃப்ரோஸேபூரில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த தலைவர்களுள் ஒருவராக இருந்தவராவார்.
இதனையடுத்து, நவீன் கொலைக்கு பஞ்சாப் பாஜக கடும் எதிர்வினையாற்றியுள்ளது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க ஆளும் ஆம் ஆத்மி அரசு தவறிவிட்டதாக விமர்சித்துள்ளது. மேலும், பஞ்சாபில் அரசுக்கு இணையாக ரௌடிகள் தனி அரசாங்கத்தை நடத்தி வருவதாகவும் பாஜக தலைவர்கள் விமர்சித்துள்ளனர். பஞ்சாபில் மக்களுக்கு பாதுகாப்பான சூழல் இல்லை என்றும் முதல்வர் பகவந்த மான் தலைமையிலான அரசை அவர்கள் விமர்சித்துள்ளனர்.
இந்த நிலையில், சம்பவம் நடைபெற்ற இடத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமிராக்களில் பதிவான காட்சிகள் உதவியுடன் தப்பியோடிய குற்றவாளிகளை பஞ்சாப் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.