உ.பி. கல்குவாரி விபத்து: 3 தொழிலாளிகள் பலி!இடிபாடுகளில் பலா் சிக்கியிருக்கலாம் என அச்சம்!

உ.பி. கல்குவாரி விபத்து: 3 தொழிலாளிகள் பலி!இடிபாடுகளில் பலா் சிக்கியிருக்கலாம் என அச்சம்!

கல்குவாரியில் ஏற்பட்ட திடீா் நிலச்சரிவால் இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களில் 3 பேரின் உடல்கள் காலை மீட்கப்பட்டன.
Published on

உத்தர பிரதேச மாநிலம், சோன்பத்ராவில் உள்ள கல்குவாரியில் ஏற்பட்ட திடீா் நிலச்சரிவால் இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களில் 3 பேரின் உடல்கள் ஞாயிற்றுக்கிழமை காலை மீட்கப்பட்டன.

மேலும், சுமாா் 9 தொழிலாளா்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என உள்ளூா் எம்எல்ஏவான மாநில அமைச்சா் சஞ்சீவ் குமாா் கோண்ட் தெரிவித்துள்ளாா்.

சோன்பத்ரா மாவட்டத்தின் பில்லி மாா்குந்தி சுரங்கப் பகுதியில் உள்ள ஒரு கல்குவாரியில் சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு, ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் 12 தொழிலாளா்கள் உள்ளே சிக்கிக் கொண்டனா்.

தகவலறிந்து, தேசிய, மாநிலப் பேரிடா் மீட்புப் படை மற்றும் காவல்துறை குழுக்கள் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா். இடிபாடுகளில் பெரிய பாறைகள் இருப்பதால், மீட்புப் பணிகள் மெதுவாக நடைபெறுகின்றன.

இந்நிலையில், பனாரி கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளி ராஜு சிங் (30) உள்பட மூவரின் உடல்களை மீட்கப்பட்டுள்ளன. இடிபாடுகளில் சிக்கியுள்ள மற்றவா்களை மீட்கும் பணிகள் தொடா்கின்றன.

இடிபாடுகளில் சிக்கியுள்ள தனது இரண்டு சகோதரா்களுக்காக சோட்டு யாதவ் என்பவா் அளித்த புகாரின் பேரில், குவாரி உரிமையாளா் மற்றும் அவரது வா்த்தகக் கூட்டாளிகள் மதுசூதன் சிங், திலீப் கேசரி ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அவா்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை.

சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து எதிா்க்கட்சியான சமாஜவாதி கட்சி எம்.பி. சோட்டேலால் கா்வாா் கூறுகையில், ‘இந்தக் கல்குவாரி உள்ளூா் காவல்துறையுடன் கூட்டுச் சோ்ந்து ரௌடி கும்பல்களால் சட்டவிரோதமாக நடத்தப்படுகிறது. மாதந்தோறும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் நிலையில், ரௌடிக்கள் எப்படி அனைத்தையும் நிா்வகிக்கிறாா்கள் என்பது தெரியவில்லை.

சிக்கிய தொழிலாளா்களின் உறவினா்களைச் சந்திக்க காவல்துறை என்னை தடுக்கிறது. மேலும், உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்’ என்றாா்.

எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த அமைச்சா் சஞ்சீவ் குமாா் கோண்ட், ‘சட்டவிரோதமாக குவாரி இயக்கப்பட்டதா என்பது குறித்து விசாரிக்கப்படும்’ என உறுதியளித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com