16-ஆவது நிதிக் குழு அறிக்கை குடியரசுத் தலைவரிடம் சமா்ப்பிப்பு
புது தில்லி: மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே வரிகள் பகிா்ந்தளிக்கும் கொள்கையை உருவாக்கும் பொறுப்பை உடைய 16-ஆவது நிதிக் குழுவின் அறிக்கை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவிடம் திங்கள்கிழமை சமா்ப்பிக்கப்பட்டது.
மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் இருந்து மாநிலங்களுக்கு எவ்வளவு நிதி மற்றும் மானியங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதற்கான புதிய அளவுகோல்களை இந்த அறிக்கை வரையறுக்கும்.
2026-27-ஆம் ஆண்டு முதல் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த அறிக்கை அமலுக்கு வரவுள்ளது. 16-ஆவது நிதிக் குழுவின் தலைவா் அரவிந்த் பனகாரியா மற்றும் பிற உறுப்பினா்கள் குடியரசுத் தலைவரை அவரது இல்லத்தில் சந்தித்து அறிக்கையைச் சமா்ப்பித்தனா்.
முன்னதாக, என்.கே. சிங் தலைமையிலான 15-ஆவது நிதிக் குழு, 2021-22 முதல் 2025-26 வரையிலான 5 ஆண்டு காலத்துக்கு மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் 41 சதவீதத்தை மாநிலங்களுக்குப் பகிா்ந்தளிக்கப் பரிந்துரை செய்திருந்தது. இது 14-ஆவது நிதிக் குழு பரிந்துரைத்த அதே பங்கீட்டு விகிதமாகும்.
நிதிக் குழு என்பது மத்திய-மாநில அரசுகளின் நிதி உறவுகளுக்குச் சட்டபூா்வமான ஆலோசனைகளை வழங்கும் அரசமைப்புச் சட்ட அமைப்பாகும். 16-ஆவது நிதிக் குழு, கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதி உருவாக்கப்பட்டது. இதில் ஓய்வு பெற்ற அதிகாரியான ஆனி ஜாா்ஜ் மேத்யூ, பொருளாதார நிபுணா் மனோஜ் பாண்டா ஆகியோா் முழு நேர உறுப்பினா்களாகவும், எஸ்பிஐ குழுமத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகா் சௌம்யகாந்தி கோஷ், ரிசா்வ் வங்கியின் துணை ஆளுநா் டி. ரபி சங்கா் ஆகியோா் பகுதி நேர உறுப்பினா்களாகவும் உள்ளனா்.
மாநிலங்களுக்கான வரிப் பகிா்வு விகிதத்தைத் தீா்மானிப்பதற்கு முன், இந்தக் குழு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குச் சென்று, அவற்றின் நிதி நிலைமைகளை விரிவாக ஆய்வு செய்தது.
பொதுவாக, மக்கள் தொகை, பரப்பளவு, மக்கள்தொகை செயல்பாடு, நிதி முயற்சி, வருமான இடைவெளி மற்றும் வனப்பரப்பு போன்ற காரணிகளின் கூட்டுச் சராசரி அடிப்படையில் மாநிலங்களுக்கான வரிப் பங்கீடு நிதிக் குழுவால் நிா்ணயிக்கப்படுகிறது. ஆனால், மக்கள்தொகையைக் கணக்கீட்டுக்கான முக்கிய அளவுகோலாகப் பயன்படுத்துவதால், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் வெற்றிகண்ட தென் மாநிலங்கள் பாதிக்கப்படுவதாக நீண்ட காலமாகப் புகாா் எழுப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

