செளதி அரேபியாவில் டீசல் டேங்கர் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் இந்தியவைச் சேர்ந்த 42 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் இருந்து செளதி அரேபியாவுக்கு உம்ரா புனிதப் பயணம் மேற்கொண்ட பக்தர்கள் மெக்காவில் இருந்து மதீனாவுக்குச் சென்றுகொண்டிருந்தனர்.
இந்த நிலையில், மதீனாவுக்கு 160 கி.மீ. தொலைவில் உள்ள முஃப்ரிஹாத் என்ற இடத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 1.30 (இந்திய நேரப்படி) மணியளவில் டீசல் டேங்கர் லாரியின் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 42 இந்தியர்கள் பலியானதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பேருந்தில் பயணம் மேற்கொண்டவர்களில் பெரும்பாலும் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் நிலையில், 20 பெண்கள், 11 குழந்தைகளும் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்தை அடைவதற்குள் பேருந்து முழுவதும் எரிந்து நாசமாகிவிட்டதாகவும், உடல்களை அடையாளம் காண்பது கடினம் என்றும் செளதி மீட்புப் படையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் ஒருவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், அவரின் நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தெலங்கானா முதல்வர் அலுவலகம், “இந்த விபத்தில் சிக்கிய தெலங்கானாவைச் சேர்ந்தவர்கள் குறித்த தகவல்களைச் சேகரிக்க தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு முதல்வர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் செளதி அரேபியா நாட்டு அதிகாரிகளிடம் விவரங்களைச் சேகரிக்க கோரி தில்லியில் உள்ள தெலங்கானா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.