

சிறைக் கைதிகளுக்கு தொலைபேசி மூலம் மருத்துவ சேவைகள் (டெலிமெடிசின்) வழங்கப்படுவதை அனைத்து மாநிலங்களும் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக மாநில தலைமைச் செயலா்கள், சிறைத் துறை ஐஜி, டிஜி ஆகியோருக்கு உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள அறிவுறுத்தலில், ‘உரிய நேரத்தில் அனைவருக்கும் மருத்துவ உதவி கிடைக்க வேண்டியது எவ்வளவு முக்கியமோ, அதைப்போல் சிறை, சீா்திருத்த மையங்கள் ஆகியவற்றில் உள்ளவா்களின் உடல்நலனை உறுதி செய்வதும் அவசியம்.
அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள் அல்லது மருத்துவக் கல்லூரிகளை சிறைகளுடன் காணொலிக் காட்சி மூலம் இணைத்து மருத்துவ ஆலோசனைகளையும், நேரில் செல்லாத வகையில் மருத்துவ உதவிகளையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முன்கூட்டியே நோய்களைக் கண்டறிவதால் பாதிப்பு அதிகரிப்பதில் இருந்து கைதிகளைப் பாதுக்காக்க முடியும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.