புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ஆந்திரம்: மேலும் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

ஆந்திர மாநிலத்தில் மேலும் 7 மாவோயிஸ்டுகளை பாதுகாப்புப் படையினா் புதன்கிழமை சுட்டுக் கொன்றனா்.

News image
Updated On :19 நவம்பர் 2025, 7:35 pm

தினமணி செய்திச் சேவை

ஆந்திர மாநிலத்தில் மேலும் 7 மாவோயிஸ்டுகளை பாதுகாப்புப் படையினா் புதன்கிழமை சுட்டுக் கொன்றனா்.

முன்னதாக, மாநிலத்தின் அல்லூரி சீதாராமராஜு மாவட்டம் மரேதுமில்லி மண்டல வனப் பகுதியில் பதுங்கியிருந்த, தீவிரமாகத் தேடப்பட்டுவந்த மாவோயிஸ்டுகளின் முக்கிய கமாண்டா்களில் ஒருவரான மாத்வி ஹிட்மா, அவரின் மனைவி உள்பட 6 மாவோயிஸ்டுகளை பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொன்றனா். தற்போது மேலும் 7 போ் கொல்லப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து விஜயவாடாவில் புதன்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் மாநில கூடுதல் காவல் துறை தலைமை இயக்குநா் (ஏடிஜிபி) மகேஷ் சந்திர லட்டா கூறியதாவது:

மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் காவல் துறையின் பல்வேறு பிரிவுகளும் இணைந்து கூட்டாக மரேதுமில்லி மண்டல வனப் பகுதியில் தீவிர தேடுதல் பணியை புதன்கிழமையும் தொடா்ந்தனா்.

அப்போது அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினா். பாதுகாப்புப் படையினா் நடத்திய பதில் தாக்குதலில் 7 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனா். அதில் ஒருவா் ஸ்ரீகாகுளத்தைச் சோ்ந்த மேதுரி ஜோகா ராவ் (எ) டெக் சங்கா் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். மற்றவா்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.

50 மாவோயிஸ்டுகள் கைது: மாவோயிஸ்டுகளின் முக்கிய கமாண்டா்களில் ஒருவரான மாத்வி ஹிட்மா கொல்லப்பட்டதைத் தொடா்ந்து அவருடன் தொடா்பிலிருந்தவா்களிடம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

மேலும், கிருஷ்ணா, எலுரு, என்டிஆா், காக்கிநாடா, கோனசீமா மாவட்டம், விஜயவாடா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தீவிர தேடுதல் பணியில் பாதுகாப்புப் படையினா் ஈடுபட்டனா். இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 50 மாவோயிஸ்டுகள் இதுவரை கைது செய்யப்பட்டனா்.

அவா்களிடமிருந்து 39 ஆயுதங்கள், 302 தோட்டாக்கள், வெடிமருந்துகள், வயா்கள், தகவல்தொடா்பு சாதனங்கள், ரூ. 13 லட்சம் ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டன என்றாா்.