இந்தியாவில் பதிவு பெற்ற கப்பல்கள், மாலுமிகளுக்கு குடியேற்ற முறை ரத்து: எளிய நடைமுறை அமலாகிறது
இந்தியாவில் பதிவுப் பெற்ற கப்பல்களும், அதில் பணியாற்றும் மாலுமிகளும் உள்நாட்டு துறைமுகங்களில் வந்து செல்ல கடைப்பிடிக்கப்பட்டு வந்த குடியேற்ற முறையை மத்திய அரசு வியாழக்கிழமை (நவ.20) ரத்து செய்தது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பாட்டில் இருந்து வந்த இந்த இரு நடைமுறைகளும் முடிவுக்கு வந்துள்ளன.
உள்நாட்டு துறைமுகங்களுக்கு வந்து செல்வதற்கு வெளிநாடுகளுக்கு செல்வதைப்போல் ஏராளமான ஆவணங்களைப் பூா்த்தி செய்து கடற்கரை புறப்பாட்டு சீட்டுக்காக காத்திருந்து மாலுமிகள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனா். இதை ரத்து செய்ய வேண்டும் என மாலுமிகள் நீண்ட காலமாக கோரி வந்தனா்.
தற்போது அமலாகி உள்ள இந்த புதிய நடைமுறையால் இந்தியாவில் பதிவு பெற்ற தேசியக் கொடியுடன் உள்ள கப்பல்கள், கடலை ஆழப்படுத்தும் கப்பல்கள், சிறிய கப்பல்கள், ஆராய்ச்சிக் கப்பல்கள் ஆகியவை கடற்கரை புறப்பாடு சீட்டை மட்டும் பயன்படுத்தி இந்திய துறைமுகங்களுக்கு வந்து செல்லலாம்.
இதேபோல், இந்தக் கப்பல்களில் உள்ள மாலுமிகள் நிலப்பகுதிக்கு குடியேற்ற அனுமதி இல்லாமல் இனி செல்லலாம்.
இதற்கு முன்பு 10 நாள்களுக்கு ஒரு முறை மாலுமிகள் குடியேற்ற அலுவகத்துக்கு சென்று கடற்கரை புறப்பாட்டு சீட்டை புதுப்பித்து கொள்ள வேண்டியிருந்தது.
இதுகுறித்து மத்திய கப்பல், துறைமுகத் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் கூறுகையில், ‘நீண்ட காலமாக இந்திய மாலுமிகள் சந்தித்து வந்த கடினமான நடைமுறையை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ரத்து செய்துள்ளாா்.
இந்தியாவில் பதிவு பெற்ற கப்பல்களின் அதன் மாலுமிகளின் தரவுகளை துறைமுக அதிகாரிகள் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றாா்.

