பிகார் மாநில முதல்வராக 10-வது முறையாக நிதீஷ் குமார் இன்று(நவ. 20) பதவியேற்றுள்ளார்.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக - ஐக்கிய ஜனதா தளக் கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 202 தொகுதிகளில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. இந்த கூட்டணியில் அங்கம் வகித்த பாஜக 89, ஐக்கிய ஜனதா தளம் 85 தொகுதிகளில் வெற்றி பெற்றன. இந்தியா கூட்டணி தரப்பில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் 25 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி வெறும் 5 இடங்களில் மட்டுமே வென்றது.
இதைத் தொடர்ந்து தனது முந்தைய ஆட்சியின் முதல்வர் பதவியை நிதீஷ் குமார் ராஜிநாமா செய்த நிலையில், பிகார் மாநிலத்தின் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவராக நிதீஷ் குமார் நேற்று தேர்வு செய்யப்பட்டார்.
தொடர்ந்து பிகார் மாநிலம் பாட்னாவில் உள்ள காந்தி அரங்கில் இன்று(வியாழக்கிழமை) நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிகார் முதல்வராக நிதீஷ் குமார் பதவியேற்றார். ஆளுநர் ஆரிஃப் முகமது கான் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து 10 ஆவது முறையாக நிதீஷ் குமார் பொறுப்பேற்றுள்ளார்.
கடந்த 2000 ஆம் ஆண்டு முதல்முறையாக முதல்வராக பொறுப்பேற்ற நிதீஷ் குமார் 7 நாள்கள் மட்டுமே பதவியில் இருந்தார். 2005 ஆம் ஆண்டு முதல் அவர் தொடர்ந்து பிகார் முதல்வராக இருக்கிறார்.
நிதீஷ் குமாரைத் தொடர்ந்து பதவியேற்பு விழாவில் சாம்ராட் சௌத்ரி, விஜய் குமார் சின்ஹா, பிஜேந்திர பிரசாத் யாதவ், ஷ்ரவோன் குமார், மங்கள் பாண்டே, திலீப் ஜெய்ஸ்வால், அசோக் சௌத்ரி உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
மேலும் அமைச்சரவையில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளும் சம அளவில் அமைச்சரவையில் இடம்பெறும் என்றும் பெண்கள் இருவருக்கு அமைச்சரவையில் வாய்ப்புள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி.நட்டா மற்றும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.