பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு பிராயச்சித்தமாக ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் ஒரு நாள் மெளன விரதம் மேற்கொண்டுள்ளார்.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் 238 தொகுதிகளில் போட்டியிட்ட ஜன்சுராஜ் கட்சி, ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. மேலும், 4 தொகுதிகளைத் தவிர, மற்ற இடங்களில் டெபாசிட்டை இழந்து படுதோல்வியைச் சந்தித்தது.
இந்த தோல்விக்கு 100 சதவீத பொறுப்பையும் தானே ஏற்பதாக கடந்த செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்து பிரசாந்த் கிஷோர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தோல்விக்கு பிராயச்சித்தமாக பிகாரின் மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் உள்ள பிதிஹர்வா காந்தி ஆசிரமத்தில் இன்று ஒருநாள் மெளன விரதம் மேற்கொண்டுள்ளார்.
அவருடன் மாநிலத் தலைவர் மனோஜ் பாரதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மெளன விரதத்தில் பங்கேற்றுள்ளனர்.
பிரசாந்த் கிஷோர் மெளன விரதம் மேற்கொண்டுள்ள இதே இடத்தில்தான், நூற்றாண்டுகளுக்கு முன்னதாக மகாத்மா காந்தி மெளன விரதம் மேற்கொண்டார்.
இதே இடத்தில்தான் ஜன் சுராஜ் கட்சி தொடங்குவதற்கு முன்னதாக, 3,500 கி.மீ. நடைப்பயணத்தை பிரசாந்த் கிஷோர் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
Summary
Prashant Kishor undertakes silent fast at Mahatma Gandhi's Ashram in Bihar
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









