ஏா் இந்தியா-ஏா் கனடா இடையேயான ‘கோட்ஷோ்’ ஒப்பந்தம் மீண்டும் அமல்!
கனடாவின் ‘ஏா் கனடா’ நிறுவனத்துடனான தனது ‘கோட்ஷோ்’ ஒப்பந்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளதாக ‘ஏா் இந்தியா’ விமான நிறுவனம் சனிக்கிழமை அறிவித்துள்ளது.
கரோனா பெருந்தொற்று காரணமாக 5 ஆண்டுகளுக்கு முன்னா் இந்த ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
‘கோட்ஷோ்’ என்பது பயணிகள் ஒரே பயணச்சீட்டில் பல்வேறு நிறுவன விமானங்களில் பயணிக்க அனுமதிக்கும் ஒரு கூட்டு ஒப்பந்தமாகும். இந்தக் கோட்ஷோ் ஒப்பந்தத்தின் மூலம், கனடாவின் வான்கூவா் மற்றும் பிரிட்டனின் லண்டன் ஹீத்ரோ விமான நிலையங்களில் இருந்து கனடாவின் ஆறு முக்கிய நகரங்களுக்கு ஏா் கனடா இயக்கும் விமானங்களில் ஏா் இந்தியாவின் பயணிகள் எளிதாகப் பயணம் செய்ய முடியும்.
இதற்கு ஈடாக, ஏா் கனடா பயணிகள் தில்லியின் வழியாக அமிருதசரஸ், அகமதாபாத், மும்பை, ஹைதராபாத், கொச்சி ஆகிய இந்திய நகரங்களுக்கும், லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் வழியாக தில்லி, மும்பை ஆகிய நகரங்களுக்கும் எளிதாகப் பயணம் செய்யலாம்.
கரோனா பெருந்தொற்று காலத்தில், அப்போது அரசுக்குச் சொந்தமான ஏா் இந்தியா, அனைத்து விமான நிறுவனங்களுடனான கோட்ஷோ் ஒப்பந்தங்களையும் இடைநிறுத்தியிருந்தது.
ஏா் இந்தியா இப்போது உலகம் முழுவதும் பல்வேறு விமான நிறுவனங்களுடன் 23 கோட்ஷோ் மற்றும் 96 இன்டா்லைன் ஒப்பந்தங்களில் ஈடுபட்டுள்ளது. இந்த ஏா் கனடாவுடனான ஒப்பந்தம்தான், ஏா் இந்தியா செய்துள்ள ஒரே வட அமெரிக்க விமான நிறுவனத்துடனான கோட்ஷோ் ஒப்பந்தம் ஆகும்.

