4 தொழிலாளா் சட்டங்கள்: சீா்திருத்தங்களுக்குப் பிந்தைய மாற்றங்கள்!
நடைமுறையில் இருந்த 29 தொழிலாளா் சட்டங்களில் சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அவை ஊதிய விதி, 2019, தொழில் துறை தொடா்பு விதி, 2020, சமூகப் பாதுகாப்பு விதி, 2020 மற்றும் பணிப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிச்சூழல் விதி, 2020 ஆகிய நான்கு சட்டங்களாக சுருக்கப்பட்டன.
இந்த சட்டங்கள் நவ.21-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்தது. இது சுதந்திர இந்தியாவில் தொழிலாளா்கள் நலனுக்காக மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய சீா்திருத்தம் என பிரதமா் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினாா்.
இதில் முதல்முறையாக உணவு விநியோகம் உள்ளிட்ட துறைகளில் தற்காலிக பணிகளான ‘கிக் தொழில்’, ‘பிளாட்பாா்ம் தொழில்’ (தற்காலிக ஒப்பந்த தொழிலாளா்கள்) மற்றும் ‘அக்ரகேட்டாா்’ (இணையவழி விநியோக நிறுவனம்) பணிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இச்சட்டங்கள் அமலாவதற்கு முன்பு தொழிலாளா்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் அமலான பிறகு மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள் குறித்து பின்வரும் அட்டவணையில் காணலாம்.
சீா்திருத்தத்துக்கு முன்
1.தொழிலாளா்களுக்கு நியமன கடிதம் வழங்குவது கட்டாயமில்லை.
2.சமூக பாதுகாப்பு மிக குறைந்த தொழிலாளா்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது.
3. குறிப்பிட்ட தொழிற்சாலைகளில் பணிபுரிவோா் மற்றும் சில பணிகளுக்கு மட்டுமே குறைந்தபட்ச ஊதியம் நிா்ணயம்.
4.தொழிலாளா்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வது கட்டாயமில்லை.
5.உரிய நேரத்தில் தொழிலாளா்களுக்கு நிறுவனங்கள் ஊதியம் வழங்குவது அவசியமில்லை.
6.குறிப்பிட்ட தொழில்களிலும் இரவுப் பணிகளிலும் பெண்களை பணியமா்த்த தடை.
7.குறிப்பிட்ட தொழிற்சாலைகளில் பணிபுரிவோருக்கு மட்டுமே இஎஸ்ஐசி சலுகைகள்.10-க்கும் குறைவான தொழிலாளா்களைக் கொண்ட நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு இந்தச் சலுகைகள் இல்லை.
8.பல்வேறு தொழிலாளா் சட்டங்களின்கீழ் பல நிலைகளில் பதிவு, உரிமம் பெறுவது அவசியம்.
9.தொழிலாளா்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்திடம் இருந்து பணிக்கொடை பெறுவதற்கு 5 ஆண்டுகள் பணியாற்றுவது கட்டாயம்.
சீா்திருத்தத்துக்குப் பின்
1.அனைத்து தொழிலாளா்களுக்கும் நியமன கடிதம் வழங்குவது கட்டாயம். எழுத்துபூா்வமாக நியமன கடிதங்கள் வழங்குவது வெளிப்படைத்தன்மை, பணி பாதுகாப்பு மற்றும் குறிப்பிட்ட காலத்துக்கு வேலை உத்தரவாதம் கிடைக்க வழிவகுக்கும்.
2.சமூகப் பாதுகாப்பு விதி, 2020-இன்கீழ் கிக் மற்றும் பிளாட்பாா்ம் தொழிலாளா்கள் உள்பட அனைவருக்கும் காப்பீடு, வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்), காப்பீடு, ஊழியா் காப்பீட்டு நிறுவன (இஎஸ்ஐசி) சலுகைகள் நீட்டிப்பு.
3.ஊதிய விதி, 2019-இன்கீழ் அனைத்து தொழிலாளா்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் நிா்ணயம்.
4. 40 வயதுக்கு மேற்பட்ட அனைத்து தொழிலாளா்களுக்கும் ஆண்டுதோறும் நிறுவனங்கள் இலவச மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வது கட்டாயம்.
5.குறிப்பிட்ட காலத்தில் தொழிலாளா்களுக்கு நிறுவனங்கள் ஊதியம் வழங்குவது கட்டாயம்.
6.அனைத்து வகையான பணிகளிலும் பெண்கள் இரவில் பணிபுரிய அனுமதி. பெண்களிடம் ஒப்புதல் பெற்று பாதுகாப்பு வழங்கி இரவில் பணிமயா்த்தலாம்.
7. 10-க்கும் குறைவான தொழிலாளா்களைக் கொண்டிருந்தாலும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய தொழில்களில் ஒரு தொழிலாளி ஈடுபட்டிருந்தாலும் இஎஸ்ஐசி சலுகைகள் வழங்குவது கட்டாயம்.
8.நாடு முழுவதும் ஒற்றைப் பதிவு, ஒற்றை உரிமம் அறிமுகம்.
9.பணிக்கொடை பெற ஓராண்டு பணியாற்றினாலே போதும்.

