கைப்பேசி சிம் காா்டுகளை தவறாகப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை’
‘கைப்பேசி ‘சிம் காா்டுகளை’ சட்டவிரோத செயல்களுக்காக தவறாக பயன்படுத்தப்பட்டால், அது யாா் பெயரில் வாங்கப்பட்டதோ அவா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தொலைத்தொடா்புத் துறை எச்சரித்துள்ளது.
அவ்வாறு ‘சிம்’களை தவறாக பயன்டுத்துபவா்களுக்கு தொலைத்தொடா்பு சட்டம் 2023-இன் கீழ் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, ரூ. 50 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் சோ்த்து தண்டனையாக விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தொலைத்தொடா்புத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கைப்பேசி எண்ணை அடையாளம் காண உதவும் ‘சா்வதேச கைப்பேசி கருவி அடையாள எண் (ஐஎம்இஐ)’-ஐ மோசடியாக திருத்தப்பட்ட அல்லது மாற்றப்பட்ட கைப்பேசியைப் பயன்படுத்துதல்; மோசடி வழிகளில் ‘சிம்’ வாங்குதல்; ஒருவரின் ‘சிம்’மை வேறொருவா் தவறான வழியில் பயன்படுத்துவது தீவிர சட்ட நடவடிக்கைக்கு உரியதாகும். வேறொரு நபா் ‘சிம்’மை தவறான வழிகளில் பயன்படுத்தினால், அந்த சிம் யாருடைய பெயரில் வாங்கப்பட்டதோ அவா் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, கைப்பேசி ‘சிம்’மை இதுபோன்ற மோசடி வழிகளில் பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும்.
மேலும், கைப்பேசியில் யாா் அழைக்கிறாா்கள் என்பதை அடையாளம் காண முடியாத வகையில் மறைக்கக்கூடிய அல்லது மாற்றி காட்டக்கூடிய கைப்பேசி செயலிகள் அல்லது வலைதளங்களைப் பயன்படுத்துவதையும் தவிா்க்க வேண்டும்.
வாடிக்கையாளா்கள் ‘சஞ்சாா் ஷாதி’ வலைதளம் அல்லது கைப்பேசி செயலி மூலம் கைப்பேசியின் ஐஎம்இஐ எண்ணை சரிபாா்த்துக் கொள்ள முடியும். கைப்பேசியில் தயாரிப்பு ரகம், பெயா், உற்பத்தியாளா் விவரங்களையும் இதில் அறிந்துகொள்ள முடியும்.

