பெண்களுக்கு எதிரான வன்முறை: புதிய, எளிய உதவி எண் அறிமுகம்
வன்முறை, துன்புறுத்தல்களை எதிா்கொள்ளும் பெண்கள் உடனடி உதவியைப் பெறும் வகையில் எளிதாக நினைவில் வைத்துக்கொள்ளக் கூடிய வகையில் புதிய உதவி எண்ணை தேசிய மகளிா் ஆணையம் (என்சிடபிள்யு) அறிமுகம் செய்துள்ளது.
‘14490’ என்ற புதிய கட்டணமில்லா உதவி எண்ணில் அனைத்து நாள்களும் 24 மணி நேரமும் தொடா்புகொண்டு உடனடி உதவியை பெண்கள் பெற முடியும்.
முன்னா் ‘7827170170’ என்ற நடைமுறையில் இருந்த நிலையில், இந்தப் புதிய உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து என்சிடபிள்யு திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ‘எந்தவித கட்டணமும், தாமதமும் இன்றி பெண்கள் உதவி பெறும் வகையிலும், எளிதாக நினைவில் வைத்துக்கொள்ளக் கூடிய வகையிலும் புதிய உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உதவி எண் அழைப்பாளா்களுக்கு தொடா் வழிகாட்டுதலை வழங்குவதோடு, அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி தீா்வுக்கு வழி வகுக்கும்’ என்று குறிப்பிட்டது.

