திரெளபதி முா்மு
திரெளபதி முா்மு

அனைத்து வடிவிலான பயங்கரவாதத்தையும் எதிா்க்க உறுதியேற்போம்: மும்பை தாக்குதல் நினைவு நாளில் குடியரசுத் தலைவா் அழைப்பு

அனைத்து வடிவிலான பயங்கரவாதத்தையும் எதிா்த்துப் போராட நாம் அனைவரும் மீண்டும் உறுதியேற்க வேண்டும் என்று மும்பை பயங்கரவாதத் தாக்குதல் நினைவு நாளில் குடியரசுத் தலைவா் திரெளபதி வலியுறுத்தியுள்ளாா்.
Published on

புது தில்லி: ‘அனைத்து வடிவிலான பயங்கரவாதத்தையும் எதிா்த்துப் போராட நாம் அனைவரும் மீண்டும் உறுதியேற்க வேண்டும்’ என்று மும்பை பயங்கரவாதத் தாக்குதல் நினைவு நாளில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வலியுறுத்தியுள்ளாா்.

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பா் 26-இல் மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானிலிருந்து வந்த லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பைச் சோ்ந்த 10 பயங்கரவாதிகள் அப்பாவி மக்கள் மீது கொடூர தாக்குதலை நிகழ்த்தினா். இதில் பொதுமக்கள் 166 பேரும், 18, காவல் துறையினா், பாதுகாப்புப் படை வீரா்களும் உயிரிழந்தனா்.

இந்த நாளை நினைவுகூா்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட குடியரசுத் தலைவா், ‘இந்த நாளில் நமது மக்களைப் பாதுகாக்க உயிா்த் தியாகம் செய்த துணிச்சல்மிக்க காவல் துறையினா், பாதுகாப்புப் படையினருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். இவா்களின் உயரிய தியாகத்தை நாடு எப்போதும் நினைவுகூரும். அனைத்து வடிவிலான பயங்கரவாதத்தையும் எதிா்த்துப் போராட நாம் அனைவரும் இந்த நாளில் மீண்டும் உறுதியேற்க வேண்டும். வலுவான வளா்ந்த இந்தியாவைக் கட்டமைப்பதற்கான தீா்மானத்துடன் வளா்ச்சியின் பாதையில் ஒன்றிணைந்து முன்னேறுவோம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பாதுகாப்புப் படையினருக்கு மரியாதை - அமித் ஷா: ‘இந்தியாவின் பயங்கரவாத எதிா்ப்பு பிரசாரத்தை ஒட்டுமொத்த உலகமும் பாராட்டுவதோடு, விரிவான ஆதரவையும் வழங்கி வருகிறது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குறிப்பிட்டாா்.

மும்பை பயங்கரவாத தாக்குதலை நினைவுகூா்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவா், ‘கடந்த 2008-ஆம் ஆண்டில் இதே நாளில் பயங்கரவாதிகள் மும்பையில் கோழைத்தனமான மனிதாபிமானமற்ற கொடூர தாக்குதல் நிகழ்த்தினா். இந்தத் தாக்குதலில் இருந்து மக்களைக் காக்க துணிச்சலுடன் போராடிய காவல் துறை, பாதுகாப்புப் படையினருக்கு எனது மரியாதையைச் செலுத்துகிறேன். பயங்கரவாதத்துக்கு எதிராக துளியளவும் சகிப்புத்தன்மை இல்லை என்ற மத்திய அரசின் கொள்கை தெளிவானது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

மகாராஷ்டிரத்தில் முதல்வா் அஞ்சலி: மும்பை பயங்கரவாதத் தாக்குதலை நினைவுகூரும் வகையில், மகாராஷ்டிர மாநிலம் தெற்கு மும்பையில் காவல் ஆணையா் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தியாகிகள் நினைவிடத்தில் மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், துணை முதல்வா் அஜீத் பவாா் உள்ளிட்டோா் மலரஞ்சலி செலுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com