

கர்நாடகத்தில் உள்ள உடுப்பியில் நவம்பர் 28 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சாலைவலம் மேற்கொள்ள உள்ளதாக பாஜக மாவட்ட தலைவர் குத்யாரு நவீன் ஷெட்டி தெரிவித்தார்.
இந்த சாலைவலமானது பன்னஞ்சேயில் உள்ள நாராயணகுரு வட்டத்திலிருந்து காலை 11.40 மணியளவில் தொடங்கி கல்சங்க சந்திப்பு வரை நடைபெறும் எனச் செய்தியாளர்கள் சந்திப்பில் ஷெட்டி தெரிவித்தார்.
பாஜக தலைவரின் கூற்றுப்படி,
பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி யக்ஷகானா, புலி நடனக் குழுக்கள் மற்றும் கிருஷ்ணா கலைஞர்கள் உள்ளிட்ட கடலோர கர்நாடகத்தின் மரபுகளை வெளிப்படுத்தும் கலாசார நிகழ்ச்சிகள் சாலைவலம் மேற்கொள்ளும் வழித்தடத்தில் நிலைநிறுத்தப்படும்.
சாலையின் ஒரு பக்கத்தில் தடுப்புகள் வைக்கப்படும். மேலும் பிரதமரை வரவேற்க 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வரிசையில் நிற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாலைவலத்திற்குப் பிறகு பிரதமர் மோடி கிருஷ்ண மடத்தில் தரிசனம் செய்வதற்காகச் செல்வார். அதன்பின்னர் பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்துவதற்கு முன்பு லட்ச காந்த கீதா பாராயணத்தில் அவர் பங்கேற்பார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய். விஜயேந்திரா, எம்.பி.க்கள் கோட்டா ஸ்ரீனிவாஸ் பூஜாரி, பிரிஜேஷ் சௌதா, மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மூத்த மாநிலத் தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள் என்று ஷெட்டி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.