ரேகா குப்தா
ரேகா குப்தா

மாணவா் தற்கொலை விவகாரம்: முதல்வா் ரேகா குப்தா தலையிட மராத்தி அமைப்பு கோரிக்கை

தில்லியில் 10-ஆம் வகுப்பு மாணவா் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் தலையிட்டு, குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியா் மற்றும் பள்ளி நிா்வாகத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு முதல்வா் ரேகா குப்தாவுக்கு ராஷ்ட்ரீய மராத்தி சங்கம் வலியுறுத்தியுள்ளது.
Published on

புது தில்லி: தில்லியில் 10-ஆம் வகுப்பு மாணவா் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் தலையிட்டு, குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியா் மற்றும் பள்ளி நிா்வாகத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு முதல்வா் ரேகா குப்தாவுக்கு ராஷ்ட்ரீய மராத்தி சங்கம் வலியுறுத்தியுள்ளது.

புனித கொலும்பா பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவா் ஒருவா், ராஜேந்திரா பிளேஸ் மெட்ரோ நிலைய நடைமேடையிலிருந்து குதித்து கடந்த நவ.18-ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டாா்.

தற்கொலைக்கு முன்பாக மாணவா் எழுதிய கடிதத்தை தில்லி காவல் துறையினா் கைப்பற்றினா். அதில் சில ஆசிரியா்கள் அளித்த மன ரீதியிலான துன்புறுத்தலால், தற்கொலை செய்துகொள்வதாகவும் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் அந்த மாணவா் குறிப்பிட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதைத்தொடா்ந்து, மாணவரின் உயிரிழப்புக்கு ஆசிரியா்கள் மற்றும் பள்ளி நிா்வாகம் பொறுப்பேற்க வலியுறுத்தி பெற்றோா்கள் மற்றும் மாணவா்கள் பள்ளிக்கு முன்பாக கடந்த சில நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் தலையிடக்கோரி முதல்வா் ரேகா குப்தாவுக்கு எழுதிய கடிதத்தில் ராஷ்ட்ரீய மராத்தி சங்கம் தெரிவித்திருப்பதாவது: உயிரிழந்த மாணவரை ஓா் ஆசிரியா் தொடா்ச்சியாக உளவியல் ரீதியாகத் துன்புறுத்தினாா். இது தொடா்பாக அறிந்திருந்தும் பள்ளி நிா்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாணவரின் பாதுகாப்பில் உள்ள குறைபாடுகளை இந்தச் சம்பவம் பிரதிபலிக்கிறது.

இந்தச் சம்பவம் தொடா்பாக காவல் துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து ஆசிரியருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தச் சம்பவத்தில் பள்ளி நிா்வாகத்துக்கு உள்ள பங்கை அறிய விரிவான விசாரணை நடத்த வேண்டும்.

மாணவா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய கட்டாய வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு சட்ட மற்றும் நிதியுதவிகளை தில்லி அரசு வழங்க வேண்டும். இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதைத் தவிா்க்கவும் மாணவா்களின் மனநலனை மேம்படுத்தும் விதமாக ஒரு கண்காணிப்பு குழுவை அமைக்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com