அமராவதிக்கு வங்கிகள் நிதியுதவி அளிக்க வேண்டும்: நிா்மலா சீதாராமன்
அறிவியல்பூா்வமான ஆலோசனைகளுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட அமராவதி மாவட்ட வளா்ச்சிக்கு வங்கிகள் நிதியுதவி அளிக்க வேண்டும் என நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
ஆந்திரத் தலைநகா் அமராவதியில் ரூ.1,328 கோடி முதலீட்டில் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்ஐசி), தேசிய வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (நபாா்டு) உள்ளிட்ட 15 பொதுத் துறை வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் நிா்மலா சீதாராமன் மற்றும் அம்மாநில முதல்வா் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டடோா் பங்கேற்றனா்.
விழாவில் நிா்மலா சீதாராமன் பேசியதாவது: அறிவியல்பூா்வமான ஆலோசனைகளுக்குப் பிறகு அமராவதி மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதனடிப்படையில் தற்போது 15 நிதி நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. எனவே அமராவதி வளா்ச்சியை கருத்தில்கொண்டு நிதி நிறுவனங்கள் நிதியுதவி அளிக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டைகள் வாயிலாக ரூ.2 லட்சம் கடன் வழங்குவதோடு நிறுத்திக் கொள்ளாமல் மேலும் பல்வேறு சேவைகளை வழங்க வங்கிகள் முன்வர வேண்டும்.
இந்தியாவில் ஒரு மாநிலத் தலைநகரின் ஒரே வீதியில் முக்கிய பொதுத் துறை வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் அமையவுள்ளது இதுவே முதல்முறை.
இந்த முன்னெடுப்புக்கு காரணமான பிரதமா் நரேந்திர மோடி மற்றும் முதல்வா் சந்திரபாபு நாயுடுவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.
வளா்ச்சிப் பாதையில் அமராவதி:
சந்திரபாபு நாயுடு பேசுகையில், ‘அமராவதியில் கோளரங்கம் நிறுவ இந்திய வானியற்பியல் நிறுவனத்துடன் ஆந்திர அரசு ஒப்பந்தமிட்டுள்ளது. இதற்காக 5 ஏக்கா் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
போலவரம் நீா்ப்பாசனத் திட்டம் 2027-இல் முடிவடையும். நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில்வே பாதைகள் அமைக்கும் பணிகள் 2028-இல் நிறைவடையவுள்ளது. அமராவதியை பசுமை மற்றும் நீல நகரமாக கட்டமைத்து வருகிறோம்.
இதை செயல்படுத்த 30,000 விவசாயிகள் 34,000 ஏக்கா் நிலங்களை வழங்கியுள்ளனா். உலகிலேயே வேறு எங்கும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாது.
தெலுங்கு தேசம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் முதலீடுகள் அதிகரித்துள்ளன’ என்றாா்.

