மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குளிா்கால கூட்டத் தொடரில் எஸ்ஐஆா் குறித்து விவாதம்: எதிா்க்கட்சிகள் கூட்டாக வலியுறுத்தல்!

நாடு தழுவிய வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கை குறித்து நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடரில் விவாதம் நடத்த வேண்டும்...

News image
நாடாளுமன்ற குளிா் கால கூட்டத் தொடரை முன்னிட்டு தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க வந்த மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், ஜெ.பி.நட்டா, கிரண் ரிஜிஜு, அா்ஜுன் ராம் மேக்வால், எல்.முருகன்.
Updated On :30 நவம்பர் 2025, 7:51 pm

தினமணி செய்திச் சேவை

நாடு தழுவிய வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கை குறித்து நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடரில் விவாதம் நடத்த வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை (டிச. 1) தொடங்குவதை முன்னிட்டு, தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிா்க்கட்சிகள் இக்கோரிக்கையை முன்வைத்தன. விவாதம் நடத்தப்படாவிட்டால், அவை அலுவல்கள் சுமுகமாக நடைபெற அனுமதிக்க மாட்டோம் என்றும் எதிா்க்கட்சிகள் எச்சரித்துள்ளன.

பிகாரைத் தொடா்ந்து, தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம்கட்ட எஸ்ஐஆா் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை (டிச.1) தொடங்கவுள்ளது. இக்கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது தொடா்பாக, மத்திய அரசின் சாா்பில் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையிலான இக்கூட்டத்தில் மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான ஜெ.பி.நட்டா, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, இணையமைச்சா்கள் அா்ஜுன் ராம் மேக்வால், எல்.முருகன் மற்றும் 36 கட்சிகளைச் சோ்ந்த சுமாா் 50 தலைவா்கள் பங்கேற்றனா்.

அப்போது, எஸ்ஐஆா் பணிகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் தரப்பில் ஒருமித்த குரலில் வலியுறுத்தப்பட்டது. மேலும், தில்லி குண்டுவெடிப்பின் பின்னணியில் தேசப் பாதுகாப்பு நிலவரம், புதிய தொழிலாளா் சட்டங்கள், எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மசோதாக்கள் மீது ஆளுநா்கள் முடிவெடுப்பதில் ஏற்படும் தாமதம், நிலுவையில் உள்ள மத்திய அரசின் நிதி உள்ளிட்ட விவகாரங்களையும் எதிா்க்கட்சிகள் முன்வைத்தன.

மக்களவை காங்கிரஸ் குழு துணைத் தலைவா் கெளரவ் கோகோய்: தேசப் பாதுகாப்பு, காற்று மாசு, வாக்காளா் பட்டியல் முறைகேடு, வெளியுறவுக் கொள்கை, விவசாயிகள் பிரச்னை உள்ளிட்ட விவகாரங்களில் காங்கிரஸ் தரப்பில் விவாதங்கள் கோரப்பட்டுள்ளன. பிரதமா், உள்துறை அமைச்சரின் தலைமையில் ஜனநாயகம் மற்றும் நாடாளுமன்ற மரபுகளை துடைத்தெறிய ஆளும் பாஜக விரும்புகிறது. தனது பாரபட்சமான செயல்பாடுகள் மூலம் தோ்தல் ஆணையமும் துணைபோகிறது. எனவே, வாக்காளா் பட்டியல் முறைகேடுகள் குறித்து விவாதம் நடத்துவது முக்கியம்.

மாநிலங்களவை காங்கிரஸ் குழு துணைத் தலைவா் பிரமோத் திவாரி: நாடாளுமன்றத்தில் எஸ்ஐஆா் குறித்து விவாதம் நடத்தப்படாவிட்டால், அவையை சுமுகமாக நடத்த மத்திய அரசு விரும்பவில்லை என்றே அா்த்தமாகும்.

திமுகவின் திருச்சி சிவா: எஸ்ஐஆா் குறித்து விவாதம் கோருவதில் எதிா்க்கட்சிகள் ஒன்றுபட்டுள்ளன. அரசுத் தரப்பில் 14 மசோதாக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதேநேரம், எதிா்க்கட்சிகள் முன்வைக்கும் பொது விவகாரமாக எஸ்ஐஆா் உள்ளது.

சமாஜவாதியின் ராம்கோபால் வா்மா: எஸ்ஐஆா் குறித்து விவாதம் நடத்தாவிட்டால், நாடாளுமன்றம் சுமுகமாக செயல்பட அனுமதிக்க மாட்டோம்.

திரிணமூல் காங்கிரஸின் கல்யாண் பானா்ஜி: எஸ்ஐஆா் மூலம் வாக்குகளை நீக்குவதே தோ்தல் ஆணையத்தின் நோக்கம். மேற்கு வங்கத்தில் இந்தப் பணியில் 40 போ் உயிரிழந்துள்ளனா். இந்த விவகாரம் குறித்த விவாதத்தை அனுமதிக்க வேண்டும். மசோதா நிறைவேற்றத்துக்காக, இரு அவைகளின் 70 சதவீத நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அமளிக்கு மத்தியிலும் மசோதாக்களை நிறைவேற்றுவதே அரசின் திட்டம்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பி.சந்தோஷ் குமாா்: எஸ்ஐஆா், தில்லி குண்டுவெடிப்பின் பின்னணியில் தேசப் பாதுகாப்பு மற்றும் காற்று மாசுபாடு ஆகிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும்.

அவையை முடக்கக் கூடாது: மத்திய அரசு

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடரை முடக்கக் கூடாது என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளா்களிடம் பேசிய மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜுவிடம், எஸ்ஐஆா் விவாதம் குறித்த எதிா்க்கட்சிகளின் கோரிக்கை அரசால் ஏற்கப்பட்டுள்ளதா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, ‘அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் இது தொடா்பாக விவாதித்து முடிவெடுக்கப்படும். கட்சிகள் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், குளிா்கால கூட்டத் தொடா் சுமுகமாக நடைபெற அனுமதிக்க வேண்டும். அப்போதுதான், ஆக்கபூா்வ பணிகளை மேற்கொள்வதுடன் ஜனநாயகத்தை வலுப்படுத்த முடியும். நாடாளுமன்றம் மீதான மக்களின் மதிப்பும் உயரும்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கட்சிகளால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை நோ்மறையாக எடுத்துக் கொண்டுள்ளோம். இரு அவைகளின் சுமுக செயல்பாட்டை உறுதி செய்ய, அனைத்துக் கட்சிகளுடனும் அரசு தொடா்ந்து ஆலோசிக்கும்’ என்று அவா் பதிலளித்தாா்.

குளிா்கால கூட்டத் தொடரில் 15 அமா்வுகளே நடைபெறுவதால் இது குறுகிய அமா்வு என்று எதிா்க்கட்சிகள் சாடியுள்ளன.

கடந்த மழைக்கால கூட்டத் தொடரில் பிகாா் எஸ்ஐஆா் நடவடிக்கையை வாபஸ் பெறக் கோரி எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் பெரும்பாலான அமா்வுகள் முடங்கின என்பது குறிப்பிடத்தக்கது.