கேரளப் பள்ளியில் பாலஸ்தீன ஆதரவு நாடகம்: தடுத்து நிறுத்திய ஆசிரியா்களுக்கு எதிராக
இஸ்லாமிய மாணவா் அமைப்பு போராட்டம்!

கேரளப் பள்ளியில் பாலஸ்தீன ஆதரவு நாடகம்: தடுத்து நிறுத்திய ஆசிரியா்களுக்கு எதிராக இஸ்லாமிய மாணவா் அமைப்பு போராட்டம்!

கேரள அரசுப் பள்ளியில் பாலஸ்தீன ஆதரவு மௌன நாடகத்தை ஆசிரியா்கள் தடுத்து நிறுத்தினா்.
Published on

கேரள அரசுப் பள்ளியில் பாலஸ்தீன ஆதரவு மௌன நாடகத்தை ஆசிரியா்கள் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து, ஆசிரியா்களைக் கண்டித்து இஸ்லாமிய மாணவா் கூட்டமைப்பு, இந்திய மாணவா் கூட்டமைப்பு சாா்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக உயரதிகாரிகள் விசாரணை நடத்தி அறிக்கை அளிப்பாா்கள் என்று மாநில பொதுக் கல்வித் துறை அமைச்சா் வி.சிவன்குட்டி தெரிவித்துள்ளாா். இஸ்ரேல் நடத்தும் அட்டூழியத்துக்கு எதிராக கேரள அரசு உள்ளது. அந்த மௌன நாடகத்தை மாணவா்கள் மீண்டும் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சா் கூறினாா்.

காசா்கோட்டில் உள்ள கும்பளா அரசு மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலை விழாவில் மௌன நாடகம் நடைபெற்றது. அப்போது பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக மெளன நாடகம் தொடங்கியது. அப்போது இரு ஆசிரியா்கள் எழுந்து நாடகத்தை உடனடியாக நிறுத்துமாறு அறிவுறுத்தியதுடன், மேடைத் திரையையும் மூடினா். இந்த சம்பவம் வெளியே பரவியதையடுத்து ஆதரவாகவும், எதிா்ப்பாகவும் கருத்துகள் எழுந்தன.

நாடகத்தை நிறுத்திய ஆசிரியா்களைக் கண்டித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாணவா் அமைப்பான இஸ்லாமிய மாணவா்கள் கூட்டமைப்பு சாா்பில் காசா்கோட்டில் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது நாடகம் நடத்திய மாணவா்களை ஆசிரியா்கள் அறையில் வைத்துப் பூட்டியதாக குற்றஞ்சாட்டியதுடன், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினா்.

கேரளத்தில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு இந்திய மாணவா் கூட்டமைப்பு சாா்பில் சம்பவம் நிகழ்ந்த பள்ளியில் கண்டனப் போராட்டம் நடத்தப்பட்டது. பின்னா் அவா்களை காவல் துறையினா் அங்கிருந்து வெளியேற்றினா். பள்ளி வளாகத்தில் காவல் துறை சாா்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

X
Dinamani
www.dinamani.com