
டார்ஜிலிங்கில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 7 பேர் பலியாகினர்; பலரைக் காணவில்லை. மேற்கு வங்கத்தின் வடக்கு பகுதியிலுள்ள டார்ஜிலிங் மாவட்டப் பகுதிகளில் பரவலாக சனிக்கிழமை இரவு கனமழை பெய்தது.
இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைப் போக்குவரத்தும் பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மே.வங்கம் - சிக்கிம் இடையிலான முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
மழை நிலவரம் குறித்து வானிலை மைய அதிகாரிகள் பேசும்போது, “டார்ஜிலிங் மாவட்டத்தின் கர்சாங்க் பகுதியில் அக். 5 காலி 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 393 மி.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளது” என்றனர். கனமழையால் டார்ஜிலிங் மாவட்டத்தின் துதியா பகுதியில் பாலசன் ஆற்றில் கட்டப்பட்டிருந்த இரும்புப்பாலம் இடிந்து விழுந்ததால், சிலிகுரி - மிரிக் இடையிலான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், டார்ஜிலிங்கில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ‘டார்ஜிலிங்கில் பாலம் இடிந்து பலர் உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் அனைவருக்கும் இரங்கலைத் தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைந்து குணமாகட்டும்.
கனமழை, நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள டார்ஜிலிங் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள கள நிலவரம் குறித்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவியையும்வழங்க நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.
துர்கா பூஜை முடிவடைந்துள்ள நிலையில், தசரா விடுமுறைக்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் டார்ஜிலிங் வருகை தந்திருக்கும் நிலையில், கனமழை, நிலச்சரிவுகளால் அவர்கள் திட்டமிட்டபடி தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், சுற்றுலா பயணிகள், உதவி தேவைப்படுவோர் +91 91478 89078 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு டார்ஜிலிங் காவல் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.