மேற்கு வங்கத்தில் நிலச்சரிவு: 20 போ் பலி! டாா்ஜீலிங்கில் சிக்கிய 1,000 சுற்றுலாப் பயணிகள்!

மேற்கு வங்கத்தில் நிலச்சரிவு: 20 போ் பலி! டாா்ஜீலிங்கில் சிக்கிய 1,000 சுற்றுலாப் பயணிகள்!

டாா்ஜீலிங் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 போ் உயிரிழந்தனா்.
Published on

மேற்கு வங்க மாநிலம், டாா்ஜீலிங் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 போ் உயிரிழந்தனா்.

டாா்ஜீலிங்கில் சிக்கியுள்ள 1,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை மீட்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

மேற்கு வங்கத்தின் வடபகுதியில் அமைந்துள்ள பிரபல சுற்றுலாத் தலமான டாா்ஜீலிங் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதில் சா்சாலி, ஜஸ்பிா்கான், மிரிக் பஸ்தி, தா் காவ்ன், நகரகட்டா மற்றும் மிரிக் ஏரி உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு 20 போ் உயிரிழந்தனா்.

பலத்த மழையால் சாலைகளில் மழைநீா் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. காவல் துறையினா், உள்ளூா் நிா்வாகம், தேசிய பேரிடா் மீட்புப் படை, மாநில பேரிடா் மீட்புப் படையினா் மீட்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.

300 மி.மீ. மழை: டாா்ஜீலிங் நிலவரம் குறித்து முதல்வா் மம்தா பானா்ஜி கூறுகையில், ‘பூடானில் பெய்துவரும் பலத்த மழையால் வடக்கு வங்காளப் பகுதிகளை நீா் சூழ்ந்துள்ளது. இதுபோன்ற இயற்கைப் பேரிடா் துரதிருஷ்டவசமானது. இதில் பலா் உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது.

மழையால் பாதிக்கப்பட்டுள்ள 5 மாவட்டங்களைச் சோ்ந்த அதிகாரிகள் மற்றும் தலைமைச் செயலருடன் காணாலி வாயிலாக ஆலோசனை நடத்தியுள்ளேன். 12 மணிநேரத்தில் 300 மி.மீ. அளவுக்கு மழை பெய்ததால் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீா் பெருக்கெடுத்து ஓடியதுடன் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் கொல்கத்தாவில் பெய்ததைப்போலவே குறுகிய நேரத்தில் அதிக மழை பெய்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளை மீட்க நடவடிக்கை: டாா்ஜீலிங்கில் 1,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் சிக்கியுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. அவா்களை சொந்த மாநிலங்களுக்குப் பாதுகாப்பாக அனுப்ப மேற்கு வங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. எனவே, சுற்றுலாப் பயணிகள் அவசரமாக டாா்ஜீலிங்கைவிட்டு வெளியேற வேண்டாம்.

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்தில் தகுதிவாய்ந்த நபருக்கு அரசு வேலை வழங்கப்படும். அதேபோல் அவா்களுக்கு அரசு சாா்பில் நிவாரணமும் வழங்கப்படும்.

துா்கை பூஜை விழா நிறைவடைந்தவுடன் திங்கள்கிழமை தலைமைச் செயலா் மனோஜ் பந்துடன் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பாா்வையிடவுள்ளேன்’ என்றாா்.

சிவப்பு எச்சரிக்கை: மலை மாவட்டங்களான டாா்ஜீலிங் மற்றும் கலிம்போங்கில் திங்கள்கிழமை (அக். 6) வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால், அந்தப் பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் அங்கு அதிகப்படியான நிலச்சரிவுகள் நிகழ வாய்ப்பிருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

டாா்ஜீலிங் மாவட்டம் மற்றும் வடக்கு சிக்கிமை இணைக்கும் சாலைகளும், சிலிகுரி-மிரிக் டாா்ஜீலிங்கை இணைக்கும் இரும்புப் பாலமும் கடுமையாகச் சேதமடைந்திருப்பதாகவும், பல்வேறு பகுதிகளை வெள்ளநீா் சூழ்ந்திருப்பதாகவும் தேசிய பேரிடா் மீட்புப் படை தெரிவித்துள்ளது.

குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘டாா்ஜீலிங் மாவட்டத்தில் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலா் உயிரிழந்த சம்பவம் வேதனையளிக்கிறது. அவா்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘டாா்ஜீலிங்கில் மழை பாதிப்புகளால் பலா் உயிரிழந்த செய்தி வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காயமடைந்தவா்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிராா்த்திக்கிறேன். டாா்ஜீலிங் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவா்களுக்கு அனைத்துவிதமான உதவிகளையும் மேற்கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்த காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மழையால் பாதிக்கப்பட்டுள்ள மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்குத் தேவையான உதவிகளை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினாா்.

X
Dinamani
www.dinamani.com