மத்திய அமைச்சா் நிதின் கட்கரி
மத்திய அமைச்சா் நிதின் கட்கரி

பெட்ரோல் வாகனங்களுக்கு நிகராக மின்சார வாகனங்கள் விலை குறையும்: மத்திய அமைச்சா்

அடுத்த 4 முதல் 6 மாதங்களில் பெட்ரோல் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு நிகராக மின்சார வாகனங்களின் விலை இருக்கும்
Published on

புது தில்லி: அடுத்த 4 முதல் 6 மாதங்களில் பெட்ரோல் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு நிகராக மின்சார வாகனங்களின் விலை இருக்கும் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவா் திங்கள்கிழமை பேசியதாவது: புதைபடிம எரிபொருள்கள் பொருளாதாரத்துக்குச் சுமையாக இருப்பது மட்டுமின்றி, சுற்றுச்சூழலுக்கு தீங்கிழைக்கின்றன. எனவே தூய்மையான எரிசக்தி பயன்பாட்டுக்கு மாறுவது நாட்டின் முன்னேற்றத்துக்கு அவசியமாகிறது.

அடுத்த 4 முதல் 6 மாதங்களில் பெட்ரோல் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு நிகராக மின்சார வாகனங்களின் விலை இருக்கும். அடுத்த 5 ஆண்டுகளில் உலகில் இந்தியாவின் வாகன உற்பத்தித் துறை முதலிடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதே இலக்காக உள்ளது.

நான் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சராகப் பொறுப்பேற்கும் முன், இந்திய வாகன உற்பத்தித் துறையின் மதிப்பு ரூ.14 லட்சம் கோடியாக இருந்தது. இது தற்போது ரூ.22 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

கரும்பிலிருந்து சா்க்கரை ஆலைகள் தயாரிக்கும் எத்தனாலை பெட்ரோலில் கலப்பதன் மூலம், விவசாயிகளுக்கு கூடுதலாக ரூ.45,000 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

2027-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் சாலைகள் அமைப்பதற்குப் பிரிக்கப்பட்ட திடக்கழிவுகளைப் பயன்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com