
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ. 1,000 - லிருந்து ரூ. 2,500- ஆக உயர்த்தப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் கீழ் உள்ள ஓய்வூதியத் திட்டத்தின்படி, ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. தனியார் நிறுவன ஊழியர்கள் பி.எஃப். கணக்கு வைத்திருக்கும்பட்சத்தில் அவர்களின் இறுதி காலத்தில் குறைந்தபட்சம் மாதம் ரூ. 1,000 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. தொழிலாளர்களின் பணிக் காலம், ஊதியம் ஆகியவற்றைக் கொண்டு இது கணக்கிடப்படுகிறது.
இந்நிலையில் பிஎஃப் ஓய்வூதியம் குறைந்தபட்ச தொகை கடந்த 11 ஆண்டுகளாக உயர்த்தப்படாத நிலையில் தற்போது அது ரூ. 2,500 ஆக உயர்த்தப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலமாக நாடு முழுவதும் பிஎஃப் ஓய்வூதியத்தை நம்பி இருக்கும் கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறுவார்கள்.
வருகிற அக். 10, 11 ஆகிய தேதிகளில் பெங்களூரில் நடைபெற உள்ள இபிஎஃப்ஓ கூட்டத்தில் இதுதொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 1,000 என்பது கடந்த 2014 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது. இதனை ரூ. 7,500 ஆக உயர்த்த வேண்டும் என்று தொடர்ச்சியாக கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் பிஎஃப் பணத்தை ஏடிஎம் மூலமாக எடுக்கும் வசதி உள்ளிட்டவைகளுக்கு இந்த கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படலாம் என்று தெரிகிறது.
இதையும் படிக்க | குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்கப் போகிறீர்களா? எச்சரிக்கை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.