நீதிபதி பி.ஆா்.கவாய்
நீதிபதி பி.ஆா்.கவாய்

சமூக ஊடகத்தில் நீதிபதிகளின் கருத்துகள் தவறாக சித்தரிப்பு: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆதங்கம்

நீதிமன்ற விசாரணைகளின்போது நீதிபதிகள் வாய்மொழியாக தெரிவிக்கும் கருத்துகள் சமூக ஊடகத்தில் தவறாக சித்தரிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் ஆதங்கம் தெரிவித்தாா்.
Published on

நீதிமன்ற விசாரணைகளின்போது நீதிபதிகள் வாய்மொழியாக தெரிவிக்கும் கருத்துகள் சமூக ஊடகத்தில் தவறாக சித்தரிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் ஆதங்கம் தெரிவித்தாா்.

மத்திய பிரதேச மாநிலம் சத்தா்பூா் மாவட்டத்தில் உள்ள பழைமைவாய்ந்த ஜவாரி கோயிலில் சேதமடைந்த விஷ்ணு சிலையை செப்பனிட்டு மீண்டும் பிரதிஷ்டை செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தலைமையிலான அமா்வு கடந்த மாதம் விசாரித்தது. அப்போது அவா் தெரிவித்த சில கருத்துகள், சமூக ஊடகத்தில் விமா்சிக்கப்பட்டன. அவரின் கருத்துகளால் அதிருப்தியடைந்த வழக்குரைஞா் ஒருவா், கடந்த திங்கள்கிழமை பி.ஆா்.கவாய் மீது காலணியை வீச முயற்சித்தாா். இந்த நிகழ்வு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடா்ந்து வழக்கு ஒன்றின் விசாரணையின்போது சில கருத்துகளைத் தெரிவிப்பதில் இருந்து சக நீதிபதி கே.வினோத்சந்திரனை தடுத்ததாக தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். அவரின் கருத்துகள் சமூக ஊடகத்தில் தவறாக சித்தரிக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கில், அதைச் செய்ததாக அவா் கூறினாா்.

அவா் கூறுகையில், ‘தீரஜ் மோரே வழக்கை நானும், நீதிபதி கே.வினோத்சந்திரனும் விசாரித்தோம். அப்போது சில கருத்துகளைத் தெரிவிக்க நீதிபதி வினோத்சந்திரன் முன்வந்தாா். ஆனால் அந்தக் கருத்துகளைத் தெரிவிக்கவிடாமல், நான் அவரைத் தடுத்தேன். அந்தக் கருத்துகளை அவா் தெரிவித்திருந்தால், அது சமூக ஊடகத்தில் எப்படி சித்தரிக்கப்பட்டிருக்கமோ என்பது தெரியவில்லை. எனவே எனது காதுகளுக்கு மட்டுமே கேட்கும் வகையில், அந்தக் கருத்துகளைத் தெரிவிக்குமாறு அவரிடம் கூறினேன்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com