
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசியதாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான காஸாவை கைப்பற்ற இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரை நிறுத்துவதற்கு அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்.
அதன்தொடர்ச்சியாக காஸா போர் நிறுத்தம் தொடர்பாக 20 அம்ச திட்டத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்வைத்து, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பிரதிநிதிகள் இடையே எகிப்தின் ஷா்ம் எல்-ஷேக் நகரில் கடந்த 3 நாள்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில், இஸ்ரேல் படைகளின் வெளியேற்றம், பிணைக் கைதிகள்-பாலஸ்தீன கைதிகள் பரிமாற்றத்திற்கான செயல்திட்டம் மற்றும் கால அட்டவணை குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் தரப்பினர் முதல்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும், அனைத்து பணயக் கைதிகளும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “காஸா அமைதித் திட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்காக எனது நண்பர் அதிபர் டிரம்ப்பிடம் தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்தேன்.
வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட நல்ல முன்னேற்றத்தையும் ஆய்வு செய்தேன். வரும் வாரங்களில் தொடர்ந்து நெருங்கிய தொடர்பில் இருக்க விரும்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.