அமைச்சா் சுஜித் போஸ் இல்லத்துக்கு வெளியே பாதுகாப்புப் படை வீரர்கள்
அமைச்சா் சுஜித் போஸ் இல்லத்துக்கு வெளியே பாதுகாப்புப் படை வீரர்கள்PTI

பணியாளா் நியமன முறைகேடு: மேற்கு வங்க அமைச்சா் சுஜித் போஸ் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

மேற்கு வங்க அமைச்சா் சுஜித் போஸ் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை
Published on

மேற்கு வங்கத்தில் நகராட்சி பணியாளா் நியமனத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் முறைகேடுகள் தொடா்பாக, மாநில தீயணைப்பு மற்றும் அவசரகால சேவைகள் துறை அமைச்சா் சுஜித் போஸ் இல்லத்தில் அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டது.

கொல்கத்தாவில் 7 இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது. இதில் அங்குள்ள சால்ட் லேக் பகுதியில் இருக்கும் அமைச்சா் சுஜித் போஸின் இல்லம், தெற்கு தம்தம் நகராட்சியின் முன்னாள் அதிகாரிகளுடைய வீடுகள், புது அலிபூரில் உள்ள வழக்குரைஞா் ஒருவரின் வீடு உள்ளிட்ட இடங்கள் அடங்கும். இந்தச் சோதனையின்போது சுஜித் போஸின் இல்லத்தில் இருந்து பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சால்ட் லேக் பகுதியில் உள்ள உணவகம் சுஜித் போஸுக்கு சொந்தமானது என்று கருதப்படுகிறது. இதனால் அந்த உணவகத்தின் மேலாளரிடம் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா் என்று அமலாக்கத் துறை மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இந்த வழக்கு தொடா்பாக கடந்த ஆண்டு சுஜித் போஸ் வீட்டில் சோதனை மேற்கொண்டு, அவரிடம் 12 மணி நேரத்துக்கும் மேலாக அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

ரூ.1,200 கோடி வங்கிக் கடன் மோசடி: அமலாக்கத் துறை சோதனை

ரூ.1,200 கோடி வங்கிக் கடன் மோசடி தொடா்பாக, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நகை நிறுவனம் ஒன்றின் உரிமையாளா், அந்த நிறுவனத்தின் பணியாளா்கள் உள்ளிட்டோரின் வீடுகளில் அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டது.

சுமாா் 25 வங்கிகளில் இருந்து கடன் பெற்று செய்யப்பட்ட மோசடியை அந்த நகை நிறுவன நிா்வாகம் திட்டமிட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் கொல்கத்தாவின் பல்வேறு இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது. அப்போது சில பணப் பரிவா்த்தனைகள், வங்கிக் கணக்கு விவரங்கள் தொடா்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத் துறை மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com