
கொல்லம்: கேரள மாநிலம் நெதுவத்தூர் பகுதியில், கிணறுக்குள் குதித்த பெண்ணைக் காப்பாற்றச் சென்ற தீயணைப்பு வீரர் உள்பட மூன்று பேர் பலியாகினர்.
நெடுவத்தூரைச் சேர்ந்த அர்ச்சனா என்ற பெண், திங்கள்கிழமை அதிகாலை கிணறுக்குள் குதித்த நிலையில், அவரை மீட்கச் சென்ற அவரது நண்பர் சிவகிருஷ்ணன் மற்றும் தீயணைப்புத் துறை வீரர் சோனி குமார் என மூன்று பேரும் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திங்கள்கிழமை நள்ளிரவில், கோட்டாரக்கரை தீயணைப்பு நிலையத்துக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், அதில், நெடுவத்தூரில் உள்ள 80 அடி ஆழக் கிணறுக்குள் ஒரு பெண் குதித்துவிட்டதாகவும் கூறப்பட்டது.
உடனடியாக விரைந்துச் சென்ற தீயணைப்புத்துறை வீரர்கள், அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கிருந்த சிவகிருஷ்ணன் என்பவரும் கிணறுக்குள் குதித்து அவரைத் தேடியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இருவரையும் காப்பாற்ற தீயணைப்புத் துறை வீரர் கிணறுக்குள் சென்ற நிலையில், மூவரும் சுயநினைவிழந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு மூவரையும் மருத்துவர்கள் பரிசோதித்து, மூவருமே இறந்துவிட்டதாகக் கூறினர். குடும்பத் தகராறு காரணமாக அர்ச்சனா கிணறுக்குள் குதித்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.