பிகார் தேர்தல்: 71 பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி 71 வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட்டது பாஜக.
வேட்பாளர் பட்டியல்
வேட்பாளர் பட்டியல்
Updated on
3 min read

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 71 வேட்பாளர்கள் அடங்கிய முதல்கட்டப் பட்டியலை அக்கட்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

243 உறுப்பினர்களைக் கொண்ட பிகார் பேரவைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. நவம்பர் 14-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி, எதிர்க்கட்சிகளின் "மகாபந்தன்' கூட்டணி இடையே நேரடிப் போட்டி நிலவும் இத்தேர்தலில் இரு கட்டங்களுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக ஆகியவை தலா 101 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சிக்கு 29 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மத்திய அமைச்சர் ஜிதன்ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, மாநிலங்களவை எம்.பி. உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா ஆகிய சிறிய கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பாஜக சார்பில் போட்டியிடும் 71 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல்கட்டப் பட்டியலை அக்கட்சி செவ்வாய்க்கிழமை (அக்.14) வெளியிட்டது. இதில் 9 பேர் பெண் வேட்பாளர்கள்.

15 ஆண்டுகளுக்குப் பின் போட்டி: தற்போது பிகார் மேலவை உறுப்பினராக உள்ள துணை முதல்வர் சாம்ராட் சௌதரி, தாராபூர் தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார். இவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பில் கடந்த 2010 பேரவைத் தேர்தலில் கடைசியாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இதேபோல், மற்றொரு மேலவை உறுப்பினரும் மாநில அமைச்சருமான மங்கள்பாண்டே, சிவான் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மீண்டும் வாய்ப்பு: மற்றொரு துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா, லகிசராய் தொகுதியில் 4-ஆவது முறையாக மீண்டும் போட்டியிடுகிறார்.

மாநில அமைச்சர்கள் ரேணு தேவி (பேட்டையா), நிதின் நபின் (பாங்கிபூர்), நிதீஷ் மிஸ்ரா (ஜான்ஜர்பூர்), பிரேம் குமார் (கயை நகரம்), ஜிபேஷ் மிஸ்ரா (ஜலே), சஞ்சய் சரோகி (தர்பங்கா), நீரஜ் குமார் சிங் பப்லு (சத்தாபூர்), கேதர் பிரசாத் குப்தா (குர்ஹானி), முன்னாள் துணை முதல்வர் தார்கிஷோர் பிரசாத் (கடிஹார்) ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கட்சியின் மூத்த தலைவர் ராம் கிருபால் யாதவ், தனாபூர் தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார்.

கட்சி மாறி வந்தவர்களுக்கு...: சில தினங்களுக்கு முன் பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்எல்ஏ சித்தார்த் சௌரவ், ஐக்கிய ஜனதா தள முன்னாள் எம்.பி. சுனில் குமார் பின்டூ, ஓய்வு பெற்ற குடிமைப் பணி அதிகாரி சுர்ஜித் குமார் சிங் ஆகியோருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பேரவைத் தலைவருக்கு வாய்ப்பில்லை: பாட்னா சாஹிப் தொகுதி எம்எல்ஏவான பேரவைத் தலைவர் நந்த் கிஷோர் யாதவுக்கு (72) மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஏழு முறை எம்எல்ஏ-வாக பதவி வகித்த இவரது தொகுதியில் பாஜக வேட்பாளராக சஞ்சய் குமார் குப்தா அறிவிக்கப்பட்டுள்ளார். கட்சியின் முடிவை ஆதரிப்பதாகவும், இளம் தலைமுறையினருக்கு வழிவிடுவதாகவும் நந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். முதல்கட்டப் பட்டியலின்படி, 10 எம்எல்ஏ-க்களுக்கு மீண்டும் வாய்ப்பு தரப்படவில்லை.

பிகாரில் முதல்கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 121 தொகுதிகளில் அக்டோபர் 17-ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 122 தொகுதிகளில் அக்டோபர் 20-ஆம் தேதியும் வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது.

• பிகார் மேலவை உறுப்பினராக உள்ள துணை முதல்வர் சாம்ராட் சௌதரி, தாராபூர் தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார். மற்றொரு துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா, லகிசராய் தொகுதியில் 4-ஆவது முறையாக மீண்டும் போட்டியிடுகிறார்.

• பாட்னா சாஹிப் தொகுதி எம்எல்ஏவான பேரவைத் தலைவர் நந்த் கிஷோர் யாதவுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

6 வேட்பாளர்களை அறிவித்தார் மாஞ்சி

மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், 6 வேட்பாளர்களின் பெயரை அக்கட்சி அறிவித்துள்ளது. மாஞ்சியின் மருமகள் தீபா (இமாம்கஞ்ச்), அவரது தாயார் ஜோதி தேவி (பாராசட்டீ), அனில் குமார் (தேகாரி), பிரஃபுல் குமார் மாஞ்சி (சிக்கந்தரா) ஆகிய எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ரோமித் குமார் (அத்ரி), லாலன் ராம் (குடும்பா) ஆகிய வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் தேகாரி, அத்ரி தவிர மற்றவை தனித் தொகுதிகளாகும்.

முன்னதாக, தனது கட்சிக்கு வெறும் 6 தொகுதிகளே ஒதுக்கப்பட்டது குறித்து ஜிதன்ராம் மாஞ்சி அதிருப்தி வெளியிட்ட போதிலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வதாக மீண்டும் உறுதி செய்தார்.

இதேபோல், தொகுதிப் பங்கீடு விவகாரத்துக்கு சுமுகத் தீர்வு காணப்பட்டுள்ளதாக, துணை முதல்வர் சாம்ராட் சௌதரி, மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான், மாநிலங்களவை எம்.பி. உபேந்திர குஷ்வாஹா ஆகிய கூட்டணிக் கட்சித் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து இறுதிக்கட்ட ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் அவர்கள் கூறினர்.

எதிர்க்கட்சி கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இன்று அறிவிப்பு?

பிகார் பேரவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் "மகாபந்தன்' கூட்டணியில் தொகுதிப் பங்கீடு புதன்கிழமை

(அக். 15) அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக, காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் அபய் துபே தெரிவித்தார்.

243 உறுப்பினர்களைக் கொண்ட பிகார் சட்டப்பேரவைக்கு இரு கட்டங்களாக (நவ. 6, 11) தேர்தல் நடைபெறவுள்ளது. இன்னும் சில தினங்களில் வேட்புமனு தாக்கல் நிறைவடையவுள்ள நிலையில், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளை உள்ளடக்கிய "மகாகட்பந்தன்' கூட்டணியில் இதுவரை தொகுதி உடன்பாடு எட்டப்படவில்லை.

இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்றுவரும் சூழலில், காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் அபய் துபே, பாட்னாவில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திங்கள்கிழமை நடைபெறவிருந்த பத்திரிகையாளர் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது. இப்போது பாஜக வேட்பாளர் பட்டியல் முழுமையாக வெளியிடப்படாததன் மூலம் அக்கூட்டணிக்குள் பிரச்னை நிலவுவது தெளிவாகிறது.

முதல்வர் நிதீஷ் குமார் செய்தியாளர்களையோ, தனது சொந்தக் கட்சித் தலைவர்களையோ சந்திக்காமல் உள்ளார். நிதீஷ் குமாரை சந்திக்க அனுமதி மறுக்கப்படுவதால், அவரது கட்சி எம்.பி. அஜய் குமார் மண்டல் பதவி விலக முடிவு செய்துள்ளார். பிகார் முதல்வர் எங்கே இருக்கிறார்? அவர் ஏன் பொதுவெளியில் உரையாடுவதில்லை?.

ஐக்கிய ஜனதா தளம் கட்சி விவகாரங்கள், தில்லியில் உள்ள குறிப்பிட்ட சில தலைவர்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. முதல்வரின் பெயரில் அவர்களே முடிவெடுக்கின்றனர்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலினத் தலைவர்கள் ஓரங்கட்டப்படுகின்றனர். ஜிதன் ராம் மாஞ்சி பலமுறை கோரிக்கை விடுத்தும், அவரது கட்சிக்கு வெறும் 6 தொகுதிகளே ஒதுக்கப்பட்டுள்ளன.

எங்களது கூட்டணியைப் பொருத்தவரை, ஒவ்வொரு தொகுதி குறித்தும் கவனத்துடன் விவாதித்து வருகிறோம்; கட்சிகள் இடையிலான தொகுதிப் பங்கீடு புதன்கிழமை அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com