விடுதலைப் புலிகள் தொடர்பான மனு: விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

விடுதலைப் புலிகள் அமைப்பை சட்டவிரோதமானது என அறிவிக்கப்பட்ட வழக்கு தொடர்பாக தன்னுடைய கருத்துகளை கேட்க வேண்டும் என இலங்கையைச் சேர்ந்தவர் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் புதன்கிழமை மறுப்பு தெரிவித்தது.
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்கோப்புப்படம்.
Published on
Updated on
1 min read

விடுதலைப் புலிகள் அமைப்பை சட்டவிரோதமானது என அறிவிக்கப்பட்ட வழக்கு தொடர்பாக தன்னுடைய கருத்துகளை கேட்க வேண்டும் என இலங்கையைச் சேர்ந்தவர் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் புதன்கிழமை மறுப்பு தெரிவித்தது.

இலங்கையில் பிறந்த ருத்ரகுமாரன் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். தன்னை நாடுகடந்த தமிழ் ஈழ அரசின் பிரதமர் எனக்கூறி அவர் இந்த மனுவை தாக்கல் செய்தார்.

முன்னதாக, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், 1967-இன்கீழ் (யுஏபிஏ) விடுதலைப் புலிகள் அமைப்பை சட்டவிரோதமானது என அறிவித்ததை விசாரிக்க 2024, ஜூன் மாதம் தீர்ப்பாயம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த விசாரணையில் தன்னுடைய வாதங்களையும் கேட்க வேண்டும் என ருத்ரகுமாரன் தாக்கல் செய்த மனுவை தீர்ப்பாயம் 2024, செப்டம்பரில் தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை அதே ஆண்டின் அக்டோபர் மாதம் தில்லி உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, தில்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவர் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் குழு, "ருத்ரகுமாரன் நாடுகடந்த தமிழ் ஈழ அரசின் பிரதமர் ஆவார். அவர் விடுதலைப் புலிகளை சட்டவிரோத அமைப்பு என அறிவித்த வழக்கில் முக்கியத் தகவல்களை வழங்க விரும்புகிறார். ஆனால் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்ற காரணத்துக்காக அவருடைய கருத்துகளை மறுக்கலாமா? இதுதொடர்பாக தீர்ப்பாயத்தை அணுகவும் அனுமதிக்க வேண்டும்' என்றனர்.

இதைத்தொடர்ந்து நீதிபதிகள், "நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் பிரதமர் என மனுதாரர் சுயமாக அறிவித்துக் கொள்கிறார். அவர் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவரல்ல என தில்லி உயர்நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. 1992-இல் விடுதலைப் புலிகள் அமைப்பை சட்டவிரோத அமைப்பு என மத்திய அரசு அறிவித்தது.

இந்த மனுவை திரும்பப்பெற மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் கேட்டதன் அடிப்படையில் அதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. சட்டத்தின்படி பிற தீர்வுகளை மனுதாரர் கோரலாம்' என உத்தரவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com