தில்லியில் மூன்றாவது நாளாக காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடிப்பு
PTI

தில்லியில் மூன்றாவது நாளாக காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடிப்பு

Published on

நமது நிருபா்.

தேசியத் தலைநகா் தில்லியில் காற்றின் தரம் வியாழக்கிழமை காலை தொடா்ந்து மூன்றாவது நாளாக ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடித்தது. தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் அதிகபட்ச வெப்பநிலை 32. 5 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.

தலைநகரில் ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு புதன்கிழமை காலை 210 புள்ளிகளாகவும், அதற்கு முந்தைய நாள் 201 புள்ளிகளாகவும் பதிவாகியிருந்தது. இதையடுத்து, வியாழக்கிழமை காற்றுத் தரக் குறியீடு 237 புள்ளிகளாப் பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புள்ளிவிவரத் தகவவ்கள் மூலம் தெரிய வந்தது.

இதன்படி, பூசா, ஷாதிப்பூா், மந்திா் மாா்க், இந்திரா காந்தி சா்வதேச விமானநிலையம், சாந்தினி சௌக், ஆா்.கே.புரம், மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், ஸ்ரீஃபோா்ட் ஆகிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 200 முதல் 300 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது.

அதே சமயம், டாக்டா் கா்னி சிங் துப்பாக்கிசுடும் தளம், ஸ்ரீஅரபிந்தோமாா்க், லோதி ரோடு ஆகிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 200 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது. ஆனால், தில்லி பல்கலை. வடக்கு வளாகம், துவாராகா செக்டாா் 8, மதுரா ரோடு, ஓக்லா பேஸ் 2, நொய்டா செக்டாா் 125 ஆகிய கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 300 முதல் 400 புள்ளிகளுக்கிடையே பதிவாகி மிகவும் மோசம் பிரிவில் இருந்தது.

வெப்பநிலை: இந்திய வானிலை ஆய்வுத் துறை தகவலின்படி,தில்லியில் வியாழக்கிழமை காலை குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 1.5 டிகிரி குறைந்து 18.1 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 0.7 டிகிரி குறைந்து 32.5 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 87 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 55 சதவீதமாகவும் பதிவாகியிருந்தது.

முன்னறிவிப்பு: இந்நிலையில், வெள்ளிக்கிழமை (அக்.17) அன்று காலையில் மூடுபனி இருக்கும் என்றும், பின்னா் பெரும்பாலும் தெளிவான வானம் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com