

கனடாவில், பாலிவுட் நடிகர் கபில் சர்மாவின் உணவகத்தின் மீது 3 ஆவது முறையாக, இன்று (அக். 16) துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
கனடா நாட்டில், பாலிவுட் நடிகர் கபில் சர்மாவின் உணவகத்தின் மீது, இன்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவொரு ஆபத்தும் ஏற்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
கடந்த 4 மாதங்களில் மட்டும் 3 ஆவது முறையாக நடைபெற்ற துப்பாக்கிச் சூடு தாக்குதலுக்கு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளி தலைவர் லாரன்ஸ் பிஷ்னோய், குல்வீர் சித்து மற்றும் கோல்டி தில்லோன் ஆகியோரின் குற்றவாளி குழுக்கள் பொறுப்பேற்றுள்ளன.
இந்தத் தாக்குதல் குறித்து, குற்றவாளிகள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், மக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்றும்; அவர்களை ஏமாற்றிய நபர்களை எச்சரிக்கவே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் கபில் சர்மாவின் உணவகத்தின் மீது முதல்முறையாக காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். நிஹாங் சிங் சமூகம் குறித்த அவரது அவதூறு கருத்தினால் அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.
பின்னர், கோல்டி தில்லோன் மற்றும் லாரன்ஸ் பிஷ்னோய் ஆகியோரின் குழுக்கள் இரண்டாவது முறையாக, அந்த உணவகத்தின் மீது தாக்குதல் நடத்தினர்.
மான் வேட்டையில் ஈடுபட்டதற்காக பிரபல நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து வரும் லாரன்ஸ் பிஷ்னோயின் குழுவினர், அவருக்கு நெருக்கமானவர்களுக்குச் சொந்தமான இடங்களிலும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இத்துடன், கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் லாரன்ஸ் பிஷ்னோயின் குழுவினரால், மகாராஷ்டிர முன்னாள் அமைச்சரும், நடிகர் சல்மான் கானின் நண்பருமான பாபா சித்திக் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மெக்சிகோ: 2 புயல்களால் 130 பேர் பலி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.